வெள்ளி, 2 மே, 2014

சமயம் - சைவம் - 4


சைவ நன்னெறி.

                தமிழகத்தில் அன்றுமுதல் இன்றுவரை தொன்றுதொட்டு நின்று நிலவி வரும் சமயங்கள் இரண்டு.  அவற்றுள் ஒன்று வைணவம். மற்றொன்று சைவம். வைணவம் திருமாலை முழுமுதற் பொருளாகக் கொண்டு வழிபாடு செய்கின்ற சமயமாகும்.  சைவமோ சிவபெருமானை முழுமுதற் பொருளாகக் கொண்டு வழிபாடு செய்கின்ற சமயமாகும்.  இன்று நமக்குக் கிடைக்கும் தமிழ் நூல்களுள் காலத்தால் தொன்மை வாய்ந்த தொல்காப்பியத்தில் இந்த இரண்டு சமயங்களைப் பற்றிய குறிப்புகள் உள்ளன.  எனவே இவை இரண்டும் சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழர் வாழ்வில் இரண்டறக் கலந்திருந்தன.  மொஹஞ்சதாரோ, ஹரப்பா என்னும் நகரங்களில் புதையுண்டிருந்த சின்னங்களுள் சிவலிங்கமும் ஒன்று என்று கூறிச் சைவசமயம் 5000 ஆண்டுகளுக்கு முன்னே இருந்த திராவிட நாகரிகத்துடன் தொடர்புடையதாகக் கூறுவர்.

தோத்திர நூல்கள் -

சைவ சமயத்துக்குரிய தமிழ் நூல்களைத் தோத்திர நூல்கள் , சாத்திர நூல்கள் என இருவகைப் படுத்துவர். இவை வேத, ஆகமங்களை உடன்பட்டு எழுந்தவை. சிவபெருமானின் புகழையும் சிறப்பினையும் பேசுகின்ற வழிபாட்டுப் பாடல்களைத் தோத்திர நூல்கள் என்பர். சைவ சமயத்திலுள்ள தோத்திர நூல்கள் பன்னிரண்டு திருமுறைகளாகும்.  திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவர் பாடிய தேவாரப் பாடல்கள் முதல் 7 திருமுறைகளாக உள்ளன. மாணிக்கவாசகர் பாடிய திருவாசகமும் திருக்கோவையாரும் எட்டாம் திருமுறையாகும்.  திருமாளிகைத் தேவர்  முதலாகிய ஒன்பது ஆசிரியர்களால் இயற்றபபட்ட திருவிசைப்பா, திருப்பல்லாண்டுப் பாடல்கள் ஒன்பதாம் திருமுறை எனப்படும்.  திருமூலர் பாடிய திருமந்திரம் பத்தாம் திருமுறை. பட்டினத்ததார், காரைக்காலம்மையார், சேரமான் பெருமாள் நாயனார் முதலிய 11 பேர் பாடிய பாடல்களின் தொகுப்பு பதினோராம் திருமுறை ஆகும்.  சேக்கிழார் பாடிய பெரியபுராணம் பன்னிரண்டாம் திருமுறை.  இந்தப் பன்னிரு திருமுறைகளைப் பாடிய அருளாளர்கள் இருபத்தேழு பேர்.  இத்திருமுறைகளில் உள்ள மொத்தப் பாடல்கள் 18402. திருமுறை ஆசிரியர்கள் இறைவன் திருவருளைப் பெற்று அத்திருவருளை மற்றவர்களும் பெறக் கூடிய  வழி முறைகளைத் தம் பாடல்களில் கூறினார்கள் . திருமுறைப் பாடல்களாகிய தோத்திர நூல்களிலிருந்து சாத்திர நூல்கள் தோன்றின.

சாத்திர நூல்கள் -

                சாத்திரம் என்பது சைவ சமயக் கோட்பாடுகளாகிய தத்துவக் கருத்துகளைத் தருவது.  சைவ சமயத்தில் சாத்திர நூல்கள் பதினான்கு. இந்நூல்களை மெய்கண்ட சாத்திரங்கள் என அழைப்பர். ( திருவியலூர் உய்யவந்த தேவநாயனார் இயற்றிய திருவுந்தியார், திருக்கடவூர் உய்யவந்த தேவநாயனார் இயற்றிய திருக்களிற்றுப்படியார், திருவெண்ணெய் நல்லூர் மெய்கண்டார் எழுதிய சிவஞானபோதம், திருத்துறையூர் அருணந்தி சிவாச்சாரியார் எழுதிய சிவஞான சித்தியார், இருபா இருபஃது , திருவதிகை மனவாசங்கடந்தார் ஆக்கிய உண்மை விளக்கம், கொற்றவன்குடி உமாபதிசிவாச்சாரியார் இயற்றிய சிவப்பிரகாசம், திருவருட்பயன், வினாவெண்பா, போற்றிப் பஃறொடை, கொடிக்கவி, நெஞ்சுவிடுதூது, உண்மைநெறி விளக்கம், சங்கற்ப நிராகரணம் ஆகிய எட்டு நூல்கள் ஆக மொத்தம் பதினான்கு நூல்கள் சாத்திர நூல்கள் எனப்படும்.)  இவற்றுள் மெய்கண்டார் எழுதிய சிவஞானபோதம் சைவ சமயத் தத்துவக் கருத்துகளைச் சுருக்கமாகவும் ஆழமாகவும் கூறுகின்ற அடிப்படை நூலாகக் கருதப் படுகின்றது.  (தோத்திர நூல்கள் பழம் எனின் , சாத்திர நூல்கள் பழச்சாறு எனலாம்.  தோத்திர நூல்கள் உணர்வுக்கு விருந்தாக அமைந்து, சமய நம்பிக்கையை வளர்ப்பன. சாத்திர நூல்கள் அறிவுக்கு விருந்தாக நின்று இறை நம்பிக்கையை விளைவிக்க உதவுபவை.  தோத்திரமும் சாத்திரமும் ஆனார் தாமேஎன்று சிவபெருமானைத் தோத்திர சாத்திர வடிவமாகக் கண்டு வழிபாடு செய்கின்றார் திருநாவுக்கரசர்.)

தத்துவம் -

                தோத்திரத்திலிருந்து எழுந்த சாத்திரக் கருத்துகளை உள்ளடக்கிய சைவ சமயத் தத்துவ நெறியைச் சைவ சித்தாந்தம் என்று கூறுவர். (சைவ சித்தாந்தம் என்னும் சொற்றொடருக்கும் பொதுவாகச் சைவ சமயக் கொள்கைகள், கோட்பாடுகள் எனப் பொருள் கூறினாலும் சிறப்பாகச் சைவ சமயத்தினர் கண்ட அறிவு முடிபுகள் அல்லது சைவ மெய்ந்நெறிக் கொள்கைகள் அல்லது சமய மெய்ப் பொருள் நெறி முறைகள் எனக் கொள்ள வேண்டும்) தமிழர்கள் கண்ட தனிப் பெரும் தத்துவ நெறி சைவ சித்தாந்த நெறி.  இதனை வேதாந்தத் தெளிவாம் சைவ சித்தாந்தம் என்றும் போற்றுவர். மேனாட்டு அறிஞரான போப் பாதிரியார், திராவிடர்களின் நுண்ணறிவின் மிகத் தேர்ந்த படைப்பு சைவ சித்தாந்தம் எனப் பாராட்டுகிறார்.  (இந்தச் சைவ நன்னெறிகள் யாவை எனக் காண்போம்)

முப்பொருட் கொள்கை -

                சித்தாந்தம் என்னும் சொற்றொடரில் உள்ள சித் என்னும் சொல் அறிவைக் குறிக்கும். இதற்கேற்ப அறிவை மையமாக வைத்து, உலகிலுள்ள எல்லாப் பொருள்களையும் மூன்று பிரிவுகளில் சைவ சித்தாந்தம் அடக்கிக் காண முற்படுகிறது.  அறிவிக்காமலே அறிகின்ற பொருள் ஒன்று.  அறிவித்தால் அறிந்து, அறிவிக்காவிடில் அறியமாட்டாத பொருள் ஒன்று. அறிவித்தாலும் அறிய முடியாத பொருள் ஒன்று  இம் முப்பொருள்களையும் முறையே பதி( இறை) பசு (உயிர்கள்) பாசம் (தளை) என்று சைவ சித்தாந்தச் செந்நெறி கூறுகிறது.  இந்த மூன்று பொருள்களும் என்றும் இருக்கும் உள்பொருள்கள்.  இவற்றை அனாதி நித்தியப் பொருள்கள் என்று சித்தாந்தம் கூறும். இவை யாராலும் தோற்றுவிக்கப் படாதவை. “பதி பசு பாசம் எனப் பகர் மூன்றில் பதியினைப் போல் பசுபாசம் அனாதிஎன்று திருமூலரின் திருமந்திரம் கூறுகிறது. இந்த முப்பொருள் உண்மைதான் சைவ சித்தாந்தத்தின் அடிப்படைக் கொள்கையாகும். 



கடவுட் கொள்கை-

                முப்பொருள்களுள் முதற்பொருள் பதி. பதி என்னும் சொல்லுக்குத் தலைவன் என்பது பொருள். இங்கே இறைவனாகிய சிவபெருமானைக் குறிக்கும்.  கடவுள் ஒருவரே. அவருக்கு இரண்டு நிலைகள் உண்டு. ஒருநாமம் ஓருருவம் ஒன்றுமில்லாத  நிலை ஒன்று. இதற்குச் சொரூப நிலை என்று பெயர். இந்த நிலையிலுள்ள கடவுளுக்கும் பெயர், குணம், குறி முதலியன ஒன்றும் இல்லை. நம் மனம், மொழி, உடல் ஆகியவற்றிற்கு எட்டாத பெருநிலை இது. இந்த நிலையைத்தான் பரமசிவம் என அழைப்பர். சொருப நிலையிலுள்ள பரமசிவன் உயிர்களுடைய துன்பங்களைப் போக்கி அவைகட்கு அருள் செய்தற்காக இரக்கம் கொண்டு, தானாகவே பல படிகள் இறங்கி வந்து படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்தொழில்களைச் செய்யும் நிலை மற்றொன்ற.  இந்நிலை தடத்தநிலை எனப் பெயர் பெறும். (கடவுளாகிய இறைவன் ஒருவனே ஒன்றிலும் தோய்வில்லாமல் சுயம்பிரகாசமாய் நிற்கும் நிலையில் சிவம் எனவும், உலகெலாம் ஆகி வேறாய் உடனாய் உயிர்களின் வழிநிற்கும் நிலையில் சக்தி எனவும் ஐந்தொழில் செய்யும் நிலையில் பதி எனவும் பெயர் பெறுகின்றான். ) (உலகிலிருந்து வேறுபட்டு அப்பாலுக்கப்பாலாகவும் ஆண்டவன் காட்சி அளிக்கிறான்.  கடந்து நிற்கும் பொருள்தானே கடவுள். உலகப் பொருள்கள் யாவற்றிலும் நீக்கமற நிறைந்து இருப்பவன் பதி.  அதாவது , எல்லாப் பொருள்களிலும் தங்கி இருப்பவன் இறைவன். இறை என்னும் சொல்லுக்கே தங்குதல் என்பதுதான் பொருள்.  மேலும், கடவுள் எல்லாப் பொருள்களிலும் தங்கி இருப்பது மட்டுமன்றி அவற்றுடன் இருந்து அவற்றை இயக்கவும் செய்கிறான்.  எனவே. இறைவனுக்கு இயவுள் எனறு ஒரு பெயர் உண்டு.) இயக்கமில்லாத நிலை சிவம், இயக்கம் பெறுகின்ற நிலை சக்தி.  சிவனுக்கும் சக்திக்குமிடையேயுள்ள உறவு சொல்லுக்கும் பொருளுக்கும் இடையேயுள்ள உறவாகும். இறைவனின் திருவருள்  நிலையே சக்தி ஆகும். நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம், சூரியன், சந்திரன், ஆன்மாவாகிய உயிர் ஆகிய எட்டிடங்கள் இறைவன் இருப்பிடங்களாகும். அளவில்லாத ஆற்றலுடைமை, இயல்பாகவே பாசங்களிலிருந்து நீங்குதல், இயற்கை உணர்வினனாதல், தன்வயத்தனாதல், முற்றும் உணர்தல், பேரருளுடைமை, தூய உடம்பினனாதல், வரம்பில்லாத இன்பமுடைமை ஆகிய எட்டுக் குணங்களும் இறைவனுக்குரிய குணங்களாகும்.  கடவுள் உருவமில்லாத அருவமாகவும், உருவம் கொண்டும், இரண்டுக்கும் இடைப்பட்ட  சிவலிங்கத் திருமேனியாகிய அருவுருவமாகவும் இருக்கிறான்.  இறைவன் ஆதியும் அந்தமுமில்லாதவன்.  அன்பெனும் பிடியினுள் அகப்படும் மலை.  அன்பே சிவம் என்று கூறுகிறார் திருமூலர். இறைவன் சத்து- அதாவது உண்மை வடிவினன், சித்து- அதாவது தூய அறிவு வடிவினன், ஆனந்தன் - இன்ப வடிவினன். எனவேதான், இறைவனைச் சச்சிதானந்தன் என்று சைவ சித்தாந்தம் கூறுகிறது.

உயிர்க்கொள்கை -

                முப்பொருள்களுள் இரண்டாவது பொருள் பசு.  பாசத்தால் கட்டுண்ட உயிர்களை இச்சொல் குறிக்கிறது.  ஆன்மா எனவும் கூறுவர். உயிர்களைக் கடவுளோ வேறு யாரோ படைக்கவில்லை.  அவை எண்ணில்லாதவை.  அவை என்றும் உள்பொருள்கள்.  உயிர்கள் தாமே அறியும் தன்மையன அல்ல, அறிவற்றவை என்றும் கூற முடியாது. அறிவிக்க அறிந்து கொள்ளும் இயல்புடையவை. இத்தகைய இயல்படைய உயிர்களுக்கு இறைவன் அறிவு பெறச் செய்கிறான். உயிர்கள் சார்ந்ததன் வண்ணம் உடையவை. அதாவது, பதியாகிய இறைவனையோ பாசமாகிய தளையையோதான் உயிர்கள் சார்ந்து நிற்கும்.  பாசமாகிய தளையில் இருக்கும் உயிர்கள் தளைகளை நீக்கிக் கடவுளைச் சார்ந்து நிற்பதே முத்தி எனப்படும் வீடுபேறாகும். (பாச நிலையில் உள்ள ஆன்மா பல வகைப் பிறவிகளை எடுக்கும் இயல்படையது. பாவ புண்ணியங்களுக்குரிய வினைகளைச் செய்ய வல்லது)

தளை பற்றிய தத்துவம் -

                முப்பொருள்களுள் மூன்றாவது பொருள் பாசம். அதாவது அறிவற்ற பொருள். இதனைத் தளை, கட்டு, தடை எனக் கூறலாம். உயிர்களை இறைவனை நாட விடாது செய்யும் தடையே - பிணிப்பே - கட்டே - பாசமாகும். இந்தப் பாசத்தை ஆணவம், கன்மம், மாயை என மூன்றாகப் பகுத்துக் காண்பது சைவ சித்தாந்த நெறி. (இந்த மூன்று கூறுகளும் எப்போதும் உள்பொருள்களே.  இவற்றைமலம் அல்லது அழுக்கு என்பர்)  ஆணவம் என்பது உயிரை அறியாமையாகிய இருளில் ஆழ்த்தும் ஆற்றல் உடையது.  உயிர்களுக்கு யான் எனது என்னும் செருக்கினை ஊட்டுவது.  (உயிர்கள் தம்மை உணரவிடாது செய்வது ஆணவம்.  ஆணவம் எப்போதும் உயிருடன் உடனாகவே இருப்பது. முத்தி நிலையில்தான்  இறைவன் முன்னர் ஆணவம் ஒடுங்கி ஆற்றல் அற்று நிற்கும்) கன்மம் எனப்படுவது உயிர்கள் செய்யும் நல்வினை, தீவினைகளைக் குறிப்பது. (மனம், மொழி, உடல் ஆகிய மூன்றால் செய்யப்படும் செயல்கள்தாம் வினைக்குக் காரணமாகும்.  நல்வினை, தீவினை என வினை இருவகைப்படும்.  உயிர்களின் பிறவிக்குக் காரணமாக இருப்பது கன்ம மலமே. வினை நீக்கமே பிறவியறுக்கும்.  இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டுஎன்பது குறள்) இறைவன் திருவருளால் இருவினைகளைப் போக்கலாம் என்பதுதான் சைவசமயம் காட்டும் நன்னெறி. பாசத்தின் மூன்றாவது கூறு மாயை.  எல்லாப் பொருள்களும் தோன்றுதற்கும் ஒடுங்குதற்கும் காரணமானது எதுவோ அதுவே மாயை. இந்த மாயையிலிருந்தே இந்த உலகம் தோன்றுகிறது. (பானைக்கு மண் போல உலகிற்கு முதற்காரணம் மாயை. பானை செய்யக் குயவன் வேண்டும். அதுபோல இறைவன் இருக்கிறான்.  பானை செய்ய மண், குயவன் மட்டும் போதுமா? சக்கரம் வேண்டாவா? சக்கரம் போலச் சக்தி இருக்கிறாள்.)  மாயையிலிருந்து தத்துவங்காகிய மூலப்பொருள்கள் தோன்றுகின்றன. இந்த மூலப் பொருள்களிலிருந்து உயிர்களுக்குத் தேவையான உடம்பு, மனம், புத்தி, சித்தம், அகங்காரம் ஆகிய உட்கருவிகள், உலகம், இன்ப துன்பங்களை நுகர்வதற்கேற்ற நுகர்ச்சிப் பொருள்கள் ஆகிய அனைத்தும் உருவாகின்றன.  இவற்றைத் தனு கரண புவன போகங்கள் என அழைப்பர்.  தத்துவங்கள் 36. மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்னும் உட்கருவிகள் நான்கு.  மெய், வாய், கண், மூக்கு, செவி எனும் ஐம்பொறிகள் செயல்களுக்குரிய வாய்(மொழி), கால், கை, எருவாய், கருவாய் ஆகிய ஐந்து கலை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என ஐம்புலன்கள் , நிலம், நீர், நெருப்பு, காற்று , ஆகாயம் ஆகிய ஐம்பூதங்கள்,  இந்த இருபத்து நான்கு தத்துவங்களும் ஆன்ம தத்துவங்கள் எனப்படும்.  சிவம், சக்தி, சதாசிவம், ஈசுரம், சுத்த வித்தை என்பன 5 சிவதத்துவங்கள். காலம், நியதி, கலை, வித்தை, அராகம், புருடன், மாயை என்னும் ஏழு(ம் வித்தியா தத்துவங்கள் ஆகும். பாசத்தின் மூன்று கூறுகளுள் ஆணவமும் கன்மமும் நுண்பொருள்களாய் அமைந்தவை.  அவற்றின் நிலைகளை மாயையாகிய பருப்பொருள்களில்தான் உணரமுடியும்.  ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்களை - பிணிப்புகளை- நீக்காமல் இறைவனை உயிர்கள் அடைய முடியாது.  இவற்றிலிருந்து நீங்க - சிறிது சிறிதாக நீங்க - உயிர்களுக்குத் தனு கரண புவன போகங்கள் தேவைப்படும்.  இந்தப பாசம் உள்ளவரை உயிர்கள் பிறந்தும் இறந்தும், இன்ப துன்பங்களை அனுபவித்தும் அல்லலுறும்.  பதியாகிய இறைவனைப் பாசம் சென்று அணுகாது.  உயிர்களைத்தான் பாசம் பந்தப்படுத்தும்.  உயிர்கள் இறைவனை அடையும்போது பாசம் நிற்காது. பாசத்திலிருந்து தளையிலிருந்து உயிர்கள் விடுதலை அடைதலே வீடுபேறு ஆகும். வீடுபேறு முத்தி அடைவது எப்படி? என இனிக் காண்போம்.


குறியும் நெறியும்

                ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்களுள் முதலில் அறுவது மாயா மலம். இரண்டாவதாக அறுவது கன்ம மலம்.  மூன்றாவதாக அறுவது ஆணவ மலம்.  இம்மலங்களை நீக்க முதலில் செய்யவேண்டியது தீட்சை.  அதாவது, ஒரு குருவை நாடி, அவரிடம் உய்யும் வழியாகிய வழிபாட்டு நெறிமுறைகளைப் பெறுவது; உயிர்கள் பாசத்திலிருந்து நீங்குவதற்கு அடிப்படையாக அமைவது வழிபாடு. அந்த வழிபாடு இறைவழிபாடு., அடியார் வழிபாடு என இரண்டு வகைப்படும். இந்த வழிபாட்டினைச் செய்ய நான்கு வழிகளை -நெறிகளைக் காட்டுகிறது சைவ சித்தாந்தம். முதலாவது நெறி சரியை எனப்படும்.  உடலால் செய்யும் வழிபாடு.  கோயில் பணிகள், அடியார் தொண்டு ஆகியவற்றைச் சரியை உணர்த்தும்.  மெய்த்திருத் தொண்டு, கைத்திருத்தொண்டு என்று சேக்கிழார் இதனைக் குறிப்பிடுவார்.  நாவுக்கரசர் காட்டிய நன்னெறி இதுவாகும்.  இரண்டாவதுநெறி கிரியை.  இஷ்ட மூர்த்தம் எனப்படும் விருப்பத்திற்குரிய  ஒரு தெய்வத் திருவுருவத்தை எடுத்துக்கொண்டு மந்திரங்களை ஓதிப் பூசை செய்து வழிபாடு செய்வது கிரியை. இது ஞானசம்பந்தர் காட்டிய நன்னெறி. மூன்றாவது நெறி யோகம். அதாவது, உள்ளத்தால் செய்யும் வழிபாடு. இறை உருவத்தை உள்ளத்தால் தியானம் செய்வது. இது சுந்தரர் காட்டிய நெறி. நான்காவது வழி ஞானம். ஞானம் என்பது ஈசன்பால் பேரன்பு செலுத்துவதாகும்.  தோத்திர நூல்களையம் சாத்திர நூல்களையும் ஓதுவது ஞானத்தின் ஒரு கூறாகும். (சரியை, கிரியை யோகங்களைச் செய்து வந்தால் மலம் நீங்குவதற்கரிய பக்குவ நிலை உண்டாகும்.  இதற்கு மலபரிபாகம் என்று பெயர்.  பிறகு நல்வினை, தீவினைகளையும் அவற்றின் பயனாகிய இன்ப துன்பங்கள் இரண்டையும் சமமாக நோக்கி. விருப்பு வெறுப்பற்ற நிலையை அடைய வேண்டும்.  இதற்கு இருவினை ஒப்பு என்று பெயர்.  பிறகு, இறைவனது திருவருட்சக்தி நம்மீது பொழியும். இந்நிலை சத்திநிபாதம் எனப்படும். உயிர்கள் பக்குவம் எய்தியதும் இறைவன் குருவடிவாக வந்து நமக்கு ஞானத்தை உணர்த்துவான்.  ஞானம் பெற்ற பின்னர் உயிர் இறைவனுடன் இரண்டறக் கலந்து பேரின்பத்தை நுகரும். இதற்கு முத்தி என்று பெயர்.)ஞானநெறியை முன்பு நமக்குக் காட்டியவர் மாணிக்கவாசகர். (மலங்களை அறுத்தல் என்பது நோய் நீங்குவதற்கு ஒப்பானது.  நோய் நீங்குவது முதற்படி. சுகம் பெற்று இன்பமாக வாழ்வதே நம்மால் விரும்பப் படுவது.  இது போல மலம் அறுத்தல், - பாச நீக்கம் முதற்படி. சிவப்பேறு அல்லது பேரின்பப்பேறு, முடிந்த நோக்கமும் அனுபவமும ஆகும். வாழ்க்கையின் குறிக்கோள் இதுவே.  இக்குறிக்கோளை அடைய மூலநோய் தீர்க்கும் முதல்வனாகிய இறைவன் துணை வேண்டும். அவனருளாலே அவன்தாள் வணங்க வேண்டும். இதற்கேற்ற பிறவி மானிடப் பிறவியே ஆகும்.  இப்பிறவியில் வாழ்த்த வாயும் நினைக்க மடநெஞ்சும் தாழ்த்தச் சென்னியும் நமக்கு இறைவன் தந்திருக்கிறான்.  மனம் மொழி மெய்யால் செய்வதுதான் உண்மையான வழிபாடு.  கடவுள் நமது பூசையை ஏற்றுக்கொண்டு நமக்கு அருள் செய்வதற்கென்றே பூசித்து வழிபடும் உருவத்தில் எழுந்தருளி இருக்கிறார் என்று மனத்தினால் பாவிக்க வேண்டும்.  வாயினால் திருமுறைப் பாடல்களை மந்திரங்களை ஓத வேண்டும். உடலால் இறைபணி செய்ய வேண்டும். உள்ளத்தால் இறைவனை நினைத்தலும், வாயினால் அவன் புகழ் பாடுதலும், உடலினால் இறைவனுக்குரிய தொண்டு செய்தலுந்தான் உண்மையான வழிபாடு, அடியார் வழிபாட்டிலும் இந்நெறியையே மேற்கொள்ள வேண்டும்.

வழிபாடு -

                வழிபாட்டில் உயிர்நாடியாக இருப்பது அன்பு. அன்பு ஒன்றினால்தான் ஆண்டவனை அடைய முடியும்.  எவ்வுயிரும் நீங்காது உறையும் இறை சிவனென்று, எவ்வுயிர்க்கும் அன்பாயிரு என்பது சான்றோர் வழக்கு.  உடலாக இருப்பது ஐந்தெழுத்து மந்திரமாகிய நமசிவாயமந்திரம்.  காதலாகிக் கண்ணீர் மல்கி, ஓதுவார் தமை நன்னெறிக்கு உய்ப்பது, வேதம் நான்கினும் மெய்ப்பொருளாவது நாதன் நாமம் நமச்சிவாயவே என்பார் ஞானசம்பந்தர்.  உயிரும் உடலுமாக இணைந்து இயக்கமாக இருப்பது இறைபணி. இது கோயில் பணி, அடியார் பணி என இருவகைப் படும்.  இலங்கும் உயிர் உடல் அனைத்தும் ஈசன் திருக்கோயில் என எண்ணிப் பணி செய்து பிறவிப் பிணிp நீங்கிப் பேரின்பப் பெருவாழ்வு எய்த முயல்வோமாக.

                                என் கடன் பணிசெய்து கிடப்பதே

                                 தன்கடன் அடியேனையும் தாங்குதல்” - அப்பர்.

                                                                                                                --------------

(இராயபுரம் சிவன்கோயில் குடமுழுக்கு விழாமலர்)


Thinnappan, SP.  Saiva Nanneri (The Philosophy of

Saiva Religion)  In: Rayavaram Sivam Temple Kumbahisheka Malalar Ed.A  Rayavaram, India (1994). (Tamil)

                               

நால்வர் நன்னெறி

                திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வரும் சைவ சமயத்தை வாழ்விக்க வந்த சான்றோர்கள் ஆவர்.  இவர்களைச் சைவ சமயத்தினர், “நால்வர்என்று ஏற்றுக் குருமார்களாகக் கொண்டு வழிபட்டு வருகின்றனர்.  இவர்கள் நால்வரும் தமிழ்நாட்டில் கி.பி. ஏழு, எட்டு, ஒன்பதாம் நூற்றாண்டுகளில் தோன்றிப் புறச் சமயத் தாக்குதலால் தளர்ச்சி அடைந்திருந்த சைவ சமயத்தை வளர்ச்சி பெறச் செய்தார்கள்.  இவர்கள் சிவபெருமானையே இறைவனாகக் கருதி வழிபட்டார்கள். இவர்கள் அடியார் கூட்டங்களுடன் தமிழ் நாட்டிலுள்ள  கோயில்கள் தோறும் சென்று அங்குள்ள இறைவனை இசைத் தமிழ்ப் பாடல்களால் பாடி வழிபட்டுப் பக்திப் பயிர் வளர்த்தார்கள்.  இவர்கள் பாடிய பாடல்களே முதல் எட்டுத் திருமுறைகளாகத் திகழ்கின்றன. திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுர்நதரர் ஆகிய மூவரும்  பாழய பாடல்களைத் தேவாரம் என அழைக்கிறோம்.  மாணிக்கவாசகர் பாடிய பாடல்கள் திருவாசகம், திருக்கோவையார் என்னும் இரண்டு நூல்களில் அடங்கும்.

                இவர்கள் நால்வரும் தங்கள் வழிபாட்டால் இறைவனடைய திருவருள் பெற்றுப் பேரின்பத்தில் திளைத்தார்கள். “நான் பெற்ற இன்பம் பெறக இவ்வையகம்என்பதற்கேற்ப ஏனையோரும் இறைவனின் அருளைப் பெறுவதற்குரிய வழிகாட்டிகளாகவும் இவர்கள் விளங்கினார்கள்.  இறைவனுடை திருவருளைப் பெறுவதற்குரிய ஒரேவழி அன்பு. நெறியாகிய பக்தி வழிபாடே என்பது இவர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும்.  உள்ளத்தால் ஓயாமல் இறைவனை எண்ணுவதும், உரையால் அவன் நாமமாகிய ஐந்தெழுத்தை ஒதி அவன் திருப்புகழைப் பாடுவதும், உடலால் அவனுக்குத் திருப்ப்ணிகள் செய்வதுமே உண்மையான பக்தி வழிபாடு என்று இந்நால்வர் பெருமக்களும் கருதினர்.  இவர்கள் வாழ்ந்து காட்டிய நன்னெறியே சைவ சமய செந்நெறியாக இன்று விளங்குகிறது.


திருஞானசம்பந்தர் -

                திருஞானசம்பந்தர் சீர்காழியில் தோன்றினார். மூன்றாம் வயதில் உமாதேவியாரால் ஞானப்பால் ஊட்டப் பெற்றுத் தோடுடைய செவியன்எனத் தொடங்கும் தேவாரப் பாடலைப் பாடினார்.  இறைவன் இவருக்குப் பொற்றாளமும், முத்துச் சிவிகையும் கொடுத்துச் சிறப்பித்தான்.  இவர் தமி்ழ் நாடெங்கும் சுற்றித் தலங்கள் தோறும் இசைப் பாடல்களைப் பாடி மக்களைச் சைவ நெறியிலே செல்லுமாறு செய்தார். பாண்டிமாதேவி மங்கையர்க்கரசியாரின்  வேண்டுகோளுக்கு இணங்கப் பாண்டிய நாடு (தமிழகத்தின் தென்பகுதி) சென்று அங்குச் செல்வாக்குப் பெற்றிருந்த சமணரை வாது செய்து வென்று பாண்டிய மன்னனைச் சைவ சமயத்திற்கு மாற்றினார்.  இவர் இவ்வுலகில் பதினாறு ஆண்டுகளே வாழ்ந்தார்.  இவர் நிகழ்த்திய அற்புதச் செயல்கள் பலப்பல. இவையனைத்தும் இறைவன் திருவருளால்  அவர் மற்றவர்களுக்காகச் செய்தன.  இவர் தமக்கென்று இறைவனிடம் எதனையும் கேட்கவில்லை.  இவர் இறைவனைத் தந்தையாகவும் தன்னை மகனாகவும் கருதி வழிபட்டார்.  இவர்பாடிய பாடல்கள் முதல் மூன்று திருமுறைகளாகத் தொகுக்கப் பெற்றுள்ளன. இவர்பாடிய பாடல்களின் எண்ணிக்கை  -4158.

                                காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி

                                 ஓதுவார் தம்மை நன்னெறிக்கு உய்ப்பது

                                 வேதம் நான்கினும் மெய்ப்பொருளாவது                   

                                 நாதன் நாமம் நமச்சிவாயவே

திருநாவுக்கரசர் -

                திருநாவுக்கரசர் திருவாய்மூரில் பிறந்தார். இவரது இயற்பெயர் மருணீக்கியார்.இளமையில் பல சமய ஆராய்ச்சி செய்து சமண சமயத்திற்குச் சென்று அங்குத் தருமசேனர் என்னும் பட்டம் பெற்றுத் தலைவராக விளங்கும் தகுதியும் பெற்றார்.  இவர் தமக்கையார் திலகவதியார்.  தம் தம்பியை ஆட்கொள்ளுமாறு இறைவனை வேண்டினார்.  திருநாவுக்கரசர் வயிற்றில் சூலைநோய் தோன்றியது.  அதைப் போக்க வழி அறியாமல் இவர் தம் தமக்கையாரை நாடினார்.  தமக்கையார் திருநீறு அளித்து இறைவனை வழிபடச் செய்தார். சூலைநோய் மறைந்தது. மருணீக்கியார் இறைவன் புகழைப் பாடும் ஆற்றல் பெற்றுக் கூற்றாயினவாறு விலக்ககலீர்என்று தொடங்கும் பாடலைப் பாடினார்.  இவர் பாடல்களில் இருந்த பொருட் சிறப்புக் காரணமாக இறைவன் இவருக்கு நாவுக்கரசர் என்ற பெயர் சூட்டினான்.  இவர் கோயில்கள் தோறும் சென்று மனத்தினால் தியானித்து, வாயினால் இறைவன் புகழைப் பாடிக் கையினால் உழவாரப்பணி செய்தார் உழவாரம் என்பது புல் செதுக்கும் ஒரு கருவி.  கோயிலில் மண்டிக் கிடக்கும் புல்லை உழவாரத்தினால் செதுக்கித் தூய்மை செய்வதைத் திருப்பணியாகக் கொண்டார் நாவுக்கரசர்.  இவர் சைவரானமை அறிந்த பல்லவப் பேரரசன் சமணர் தூண்டுதலால் இவரைச் சுண்ணாம்பு நீற்றறையில் இட்டும், நஞ்சு கொடுத்தும், கடலில் தள்ளியும், துன்புறுத்தினான்.  இறைவன் திருவருளாலும் தம் பக்தித் திறத்தாலும் இவர் இறவாது மீண்டார்.  இவர் அருளாற்றலைக் கண்டு பல்லவப் பேரரசனும் சைவனாக மாறினான்.  திருஞானசம்பந்தர் இவரை அப்பர் என அழைத்தார்.  இவர் திருவையாற்றில் கைலைக் காட்சியைக் கண்டு இன்புற்றார்.  இவர் எண்பத்தோராண்டுகள் இவ்வுலகில் வாழ்ந்தார்.  இறைவனிடத்தில் உறுதியான பற்றும் உண்மையான தொண்டுள்ளமும் கொண்ட அப்பர் பாடிய பாடல்கள் நான்கு, ஐந்து, ஆறு திருமுறைகளாகத் தொகுக்கப் பெற்றுள்ளன.  இவர் இறைவனைத் தலைவனாகவும் தன்னை அடிமையாகவும் கொண்டு வழிபட்டவர். .இவர் பாடிய பாடல்களின் எண்ணிக்கை 3066.

                                                நங்கடம் பனைப் பெற்றவள் பங்கினன்

                                                 தென்கடம்பைத் திருக் கரக் கோயிலான்

                                                 தன் கடன் அடியேனையும் தாங்குதல்

                                                 என் கடன் பணிசெய்து கிடப்பதே

சுந்தரர் -

                சுந்தரர் என்னும் நம்பியாரூரர் திருநாவலூர் என்னும் ஊரில் தோன்றினார்.  அரசர் ஒருவரால் வளர்க்கப் பட்டார்.  இவருக்குத் திருமணம் ஏற்பாடாகியிருந்த போது சிவபெருமான் ஒரு முதிய வேதியராகத் தோன்றி இவர் தமக்கு அடிமை என்று கூறித் தடுத்தாட் கொண்டான்.  இவருக்கு இறைவன் காட்சி கொடுத்து அருச்சனை பாட்டே ஆகும். சொற்றமிழ் பாடுகஎன்று பணித்தான். “பித்தா பிறைசூடிஎன்று இவர் பாடத் தொடங்கினார்.  இறைவன் சுந்தரரை நண்பராக ஏற்று இவருக்கு வேண்டிய உதவிகள் பலவற்றை அவ்வப்போது செயது வந்தான்.  இவர் பரவையார், சங்கிலியார் என்னும் இரு பெண்களை மணந்து இவ்வுலகில் 18 ஆண்டுகள் வாழ்ந்தார்.  இவர் சத்தியம் தவறியதற்காக இறைவன் இவர் கண்ணொளி மழுங்கச் செய்தான்.  பிறகு இறைவனிடம் இவர், தம் தவற்றினைக் கூறி மன்னிப்பு வேண்டினார்.  பிறகு கண்ணொளி பெற்றார்.  சுந்தரர் பல ஊர்களுக்குச் சென்று இறைவனை வழிபட்டுப் பாடல்கள் பாடியுள்ளார்.  இவர் பாடிய பாடல்கள் ஏழாம் திருமுறையாக அமைந்துள்ளன.  இவர் சைவ சமய அடியார்களின் வரலாற்றைத் திருத்தொண்டத் தொகை என்னும் அமைப்பில் 11 பாடல்களைப் பாடியுள்ளார்.  இப்பாடல்களே சேக்கிழார் பாடிய பெரிய புராணத்திற்கு ஆதாரமாக அமைந்தன.  இவர் வாழ்க்கை தோழமை என்னும் யோக நெறியைப் புலப்படுத்துவது.  சம்பந்தர், நாவுக்கரசர் காட்டிய நெறியைப் பரப்பிய பெருமை இவரைச் சாரும். இவர் பாடிய பாடல்களின் எண்ணிக்கை  -1026.

                                மற்றுப் பற்றெனக்கு இன்றி நின்திருப்பாதமே மனம் பாவித்தேன்

                                 பெற்றலும் பிறந்தேன் இனிப் பிறவாததன்மை வந்தெய்தினேன்

                                 கற்றவர் தொழுதேத்தும் சீர்க்கறையூர் பாண்டிக்கொடு முடி

                                 நற்றவா உனை  நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே

மாணிக்கவாசகர் -

                இவர் திருவாதவூரில் தோன்றியவர்.  இவர் பாண்டிய மன்னனிடம் முதல் அமைச்சராகப் பணியாற்றினார்.  அரசனிடம் பெருஞ்செல்வம் பெற்றுக் குதிரை வாங்கச் சென்றபோது திருப்பெருந்துறை என்னும் இடத்தில் இறைவன் குருவாக வந்து இவரை ஆட்கொண்டார்.  உடனே இறைவன் திருவருளால் இவர் கனிவு மிகுந்த - மாணிக்கம் போன்ற வாசகங்களைப் பாடினார். இறைவன் இவருக்கு மாணிக்க வாசகர் என்னும் பெயரைச் சூட்டினான்.  இறைவனுக்குத் திருப்பெருந் துறையில் பெரிய கோயில் ஒன்றை இவர் கட்டினார்.  இறைவன் இவருக்காக மதுரையில் நரிகளைப் பரிகளாக்கியும்)குதிரைகளாக்கியும்) பிட்டுக்கு மண் சுமந்தும் திருவிளையாடல் புரிந்தான்.  இவரும் பலதலங்களை வழிபட்டு இறுதியில் தில்லையை அடைந்தார்.  இவர் தில்லையில் புத்த சமயத்தினரை வாதம் செய்து வென்றார்.  இறுதியில் தில்லை நடராசப் பெருமான் அருளைப் பெற்று அவன் திருவடி சேர்ந்தார்.  இவர் இவ்வுலகில் 32 ஆண்டுகள் வாழ்ந்தார். இவர் பாடிய பாடல்கள் திருவாசகம், திருக்கோவையார் என்னும் இரண்டு நூல்களாக உள்ளன.  இவை எட்டாம் திருமுறையாக அமையம்.  இவர் காட்டிய நெறி ஞான நெறியாகிய சன்மார்க்க nநிறயாகும்.  திருவாசகத்திற்கு உருகார் ஒருவாசகத்திற்கும் உருகார் என்பது பழமொழி.  உள்ளத்தை உருக்கும் பாடல்களின் தொகுப்பே திருவாசகம். இது நமசிவாய வாழ்க நாதன்தாள் வாழ்கஎன்று தொடங்குகிறது. திருவாசகப் பாடல்களின் எண்ணிக்கை 656. திருக்கோவையார் பாடல்கள் எண்ணிக்கை-  400.


                  நாடகத்தால் உன்னடியார் போல் நடித்து நானடுவே

                                                 வீடகத்தே புகுந்திடுவான் மிகப்பெரிதும் விரைகின்றேன்                                                                ஆடகச்சீர் மணிக்குன்றே இடையறா அன்புனக்குஎன்

                                                 ஊடகத்தே நின்றுருகத் தந்தருள் எம்முடையானே.”


-நான்காம் திருமுறை மாநாட்டு வெளியீடு- 1984                                                                                                    













(காரைக்கால்)     அம்மையார்  அற்புதம்.

                சிவபெருமானை மனத்தால் நினைத்து, வாயால் அவன் புகழ்பாடி, உடலால் அவனுக்குரிய பணிகளைச் செய்து வாழ்ந்த பெருமக்களை நாயன்மார்கள் எனச் சைவச் செந்நெறி அழைக்கும்.  மதிவளர் சடைமுடி மன்றுளாரை முன் துதிசெயும் நாயன்மார்’’ என்றுதான் நாயன்மார் வரலாற்றைப் பாடிய சேக்கிழார் நமக்கு அறிமுகப் படுத்துகிறார்.  அளவிலாத பெருமையராகிய அடியார்கள் நாயன்மார்கள்.  இவர்கள் அறுபத்து மூவர்.  இவர்களின் ஒருவரான காரைக்கால் அம்மையாரின் அற்புதங்களை, தனிச் சிறப்பினைசு சுட்டிக் காட்டுவதே இந்தக் கட்டுரையின் நோக்கமாகும்.  சேக்கிழார் பாடிய பெரியபராணத்தில் காணப்படும் காரைக்கால் அம்மையார் பராணத்திலருந்தும் காரைக்கால் அம்மையார் பாடிய அற்புதத் திருவந்தாதி, திரு இரட்டை மணிமாலை, திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகங்கள் ‘‘ஆகிய பதினோராம் திருமுறை நூல்களிலிருந்தும் அம்மையாரின் பெருமையைப் பார்க்க முயல்வோம்.

வணிகர் குல வனிதையார் -

                அறுபத்து மூன்று நாயன்மார்களில் தனவணிகர் குலத்தைச் சார்ந்தவர் ஐவர். அமர்நீதியார், இயற்பகையார், கலிக்கம்பர், காரைக்கால் அம்மையார், மூர்த்தி நாயனார் ஆகிய ஐவரில் ஒருவராகக் காரைக்கால் அம்மையார் விளங்குகின்றார்.  சேக்கிழார்  காரைக்கால் அம்மையார் புராணத்தைத் தொடங்கும் போதே மானமிகு தருமத்தின் வழிநின்று வாய்மையினில் ஊனமில் சீர்ப் பெருவணிகர் குலம்’’ என்று (1722)வணிகர் குலப் பெருமையைப் பேசுகிறார்.  தன்னிலையில் தாழாமையும் தாழ்வு வந்துழி உயிர் வாழாமையுமாகிய மான மிக்கவர்கள், அறநெறி பிறழாத வாழ்க்கையினர் , உண்மை நேர்மைப் பண்பு உடையவர்கள் , குற்றமில்லாத பெருமை கொண்டவர்கள்’’ என்று வணிகர்களின் நல்லியல்புகளைப் பாராட்டிய சேக்கிழார் வணிகர்  பெருங்குலம் விளங்க வந்து பிறந்தருளியவர்’’ காரைக்கால் அம்மையார் என்று அம்மையார் பெருமையைப் பேசுகிறார்.  தனவணிகர் குலத் தகுதிக்கு அம்மையார் அக்குலத்தில் தோன்றியது ஆக்க மூட்டிய ஒன்றல்லவா? பெரிய புராணம் பேசும் நாயன்மார்களில் மங்கையர்க்கரசியார், காரைக்கால் அம்மையார், இசை ஞானியார், ஆகிய மூவரும்  பெண்கள்.  இவர்களில் காரைக்கால் அம்மையார் பாடல் இயற்றிய கவியரசியாக விளங்கியவர் அல்லவா?

பெயர்ச் சிறப்பு -

                அம்மையார்க்கு அவர் பெற்றொர் இட்ட பெயர் புனிதவதியார் என்பதாகும்.  தூய்மை வாழிடம் என்பது இதன் பொருள்.  தூய்மை என்பது அவாவின்மை மற்றது வாஅய்மை வேண்ட வரும்’’(குறள் - 364) என்னும் குறளுக்கேற்ப அவா ( ஆசை) இல்லாதிருந்தவையே வாழ்வாகக் கொண்டவர் அம்மையார்.  அத்தன்மையையும் மெய்ப் பொருளாகிய இறைவனை வேணடிப் பெற்றவர்.  பேயார் என்று சுந்தரர் திருத்தொண்டத் தொகையில் இவரைக் குறிப்பிடுகின்றார்.  அம்மையார் பாடிய திருவாலங்காட்டு மூத்த  திருப்பதிகத்தில் காரைக்காற்பேய்’’ என்ற தொடர் வருகின்றது.  இத்தொடர் அற்புதத் திருவந்தாதியிலும் (86) இடம் பெற்றுள்ளது.  மேலும் அந்நூலில்பேயாய நற்கணத்தில் ஒன்றாய நாம்’’ என்று தம்மை அம்மையார் அழைத்துக் கொள்கிறார்.  தம் கணவன் தம்மைத் தெய்வமாக வணங்கிய காரணத்தால் அவனுக்காகத் தாங்கிய அழகுமிக்க தசைப் பொதியைக் கழித்து  இறைவனிடத்தில் இவர் பேய் வடிவினை வேண்டிப் பெற்றதால் - எலும்புடம்பாக இருந்ததால் - இவர் பேயார் என அழைக்கப் பெற்றார்.  கைலாயத்திற்குத் தலையாலே இவர் நடந்து சென்றபோது இறைவன் உமையம்மையாரிடம் காரைக்கால் அம்மையாரை இவள் நம்மைப் பேணும் அம்மை காண்’’ என்று அறிமுகப் படுத்தி, இவரை அம்மைகாண் என்று அழைத்த காரணத்தால்  இவர் அம்மையார் என அழைக்கப் பெற்றார்.  இவர் பிறந்த ஊராகிய காரைக்கால் என்பதையம் சேர்த்துக் காரைக்கால் அம்மையார் என அழைத்தனர்.  இதனையே சேக்கிழாரும் இவர் புராணத்துக்குப் பெயராகக் கூறுகிறார்.  காரைக்கால் அம்மையார் கி.பி. 5 அல்லது  6ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் என்பது ஆராய்ச்சியாளர் கருத்து.  (அழகப்பன். வெ.சு - 1987 -18)

இளமையிலேயே இறை நாட்டம்-

அம்மையார் பேசத் தொடங்கிய நாளிலிருந்து  ஆண்டவனிடம் ஆராக்காதல் பூண்டவர்.  இவர் பாடிய அற்புதத் திருவந்தாதியின் முதல் பாட்டில் காணப்படும்,                                           

பிறந்து மொழி பயின்ற பின்னெலாம் காதல்

                                சிறந்து நின் சேவடியே சேர்ந்தேன்’’

என்னும் தொடர் வாயிலாக அறியக் கிடக்கின்றது.  இதனைச் சேக்கிழார் வண்டல் பயில்வன வெல்லலாம் வளர்மதியம் புனைந்த சடை அண்டர் பிரான் திருவார்த்தை அணைய வருவன பயின்று’’ (1726) என்று குறிப்பிடுகின்றார். சிறு வயதில் மணல் வீடுகட்டி விளையாடும் பருவத்திலேயே இறைவன் பெருமை பேசி விளையாடும் இயல்பினர் அம்மையர் என்று குறிப்பிடுகின்றார். 

மாங்கனி பெற்ற மாண்பு -

                அம்மையார் சிவபெருமானிடத்தில் கொண்ட ஈடுபாட்டினைப் போலவே சிவனடியார்களிடத்தும் பக்தி கொண்டவர்.  அவர் தம் கணவருடன் இல்லறம் தொடங்கிய காலத்திலிருந்தே சிவனடியார்களுக்கு நல்லமுது அளித்தும், நவமணிகளும் நல்லாடைகளும் நல்கியும், வேண்டுவன வழங்கியும் வாழ்ந்தவர்.  இப்படி வாழும்போது ஒருநாள் அம்மையாரின் கணவனாகிய பரமதத்தனுக்கு அவன் நண்பர்கள் இரு மாங்கனிகள் கொடுத்தனர்.  அவற்றை அவன் மனைவியார் பால் சேர்ப்பித்தான்.  அவன் உணவுண்ண வருமுன் சிவனடியார் ஒருவர் அம்மையாரின் இல்லம் வந்தார்.  அவர் பசியால் வருந்தி இருப்பதைக் கண்ட அம்மையார் அவர்கட்கு அமுது படைக்கும் போது கனியாக மாங்கனிகளில் ஒன்றைப் படைத்து விட்டார்.  பின்னர் கணவன் தான் உணவுண்ண வந்தபோது அம்மாங்கனியைக் கொண்டு வருமாறு கேட்டான்.  அம்மையார் ஒரு மாங்கனியைக் கொடுக்க அதனைச் சுவைத்த கணவன் இன்னொரு மாங்கனியையும் கேட்டான்.  அம்மையார் அறையில் தனித்து நின்று தயங்கி இன்னொரு கனிக்கு என்செய்வது என நினைத்திருக்கும் வேளையில் இறைவன் அருளால் அவர் கையில் ஒரு மாங்கனி வந்து நின்றது.  இதனைக் கணவனிடம் கொடுத்து மகிழ்ந்தார் அம்மையார்.  இக்கனி முன்புண்ட கனியை விடச் சுவை மிகுதியாக உடையதாக இருக்கக் கண்ட கணவன், ஐயுற்றுக் கேட்க அம்மையார் நிகழ்ந்தவற்றைக் கூறினார்.  ஈசனருள் என அதனை நம்பாத கணவன் அதனைச் சோதிக்க வேண்டி மற்றுமொரு கனி வரவழைத்துத் தருக எனக் கேட்க அவர்முன் இறையருளால் மற்றுமொரு கனியும் பெற்றளித்தார்.  கணவன் கையில் வந்ததும் அக்கனி மறையக் கண்டான்.  உடனே உள்ளம் தடுமாறித் தன் மனைவியின் தெய்வத் தன்மையை உணர்ந்து அவருடன் உடனுறையாது வாணிகத்தின் பொருட்டுச் செல்வான் போல் அவ்வூரிலிருந்து பாண்டியநாடு சென்றான். மாங்கனி இறையருளால் அம்மையார் பெற்றது இவர்வாழ்வில் நடந்த ஓர் அற்புதச் செயலல்லவா? இந்த அற்புதச் செயல்தான் வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்த அம்மையாரை வானுறையும் தெய்வத்துள் ஒன்றாக வைத்தது.

கணவன் தொழுத காரிகை -

                பாண்டிநாடு சென்ற கணவன் வேறொருத்தியை மணந்து அவள்பால் பெற்ற பெண்மகளுக்கு அம்மையார் பெயரை இட்டு வாழ்ந்து வந்தான்.  இச்செய்தி அறிந்த அம்மையாரின் உறவினர்கள் அவளைப் பாண்டிய நாட்டிற்கு அழைத்துச் சென்றனர்  அம்மையாரைக் கண்ட பரமதத்தன் அம்மையார் அடியின் கீழ் தன் மனைவி மகள் ஆகியோரோடு வீழ்ந்து வணங்கி, உற்றார் உறவினரிடம் இவர் மானிடப் பிறவியல்லர், “இவர் தெய்வமாகப் போற்றத் தக்கவர். நீங்களும் இவரைப் போற்றி வழிபடுங்கள்’’ என்று கூறினான். இதனைக் கேட்ட பின்னர்தான் அம்மையார் இறைவனை வேண்டிப் பேய்வடிவம் பெற்றார்.

பேய் வடிவம். -

                அம்மையார் பெற்ற பேய் வடிவம் இறைவனை அவர் வேணடிப் பெற்ற வடிவம். இறைவனது திருவடியைப் போற்றி வணங்கி ஞான உணர்வு பெறுவதற்காக அம்மையார் பெற்ற வடிவம் அது.  உடம்பிலுள்ள ஊன், தசை ஆகியவற்றால் அமையும் அழகை எல்லாம் உதறி எலும்பு வடிவமே உடம்பாக (எலும்புச் சட்டமாக உடல் தென்படுமாறு) அமைந்த வடிவமே அந்தப பேய் வடிவம்.  இப்பேய் வடிவத்தைக் கண்டு வானமும் மண்ணும் எல்லாம் வணங்கியதாகச் சேக்கிழார் குறிப்பிடுகிறார். (1171) அற்புதத் திருவந்தாதியில் இறைவனை வணங்கும் நற்கணத்தில் ஒன்றானேன் நான் என்னும் பொருள்பட இவர் கூறுவதால் இறைவனை வணங்கும் பேய்க் கூட்ட வடிவம் இவர் கொண்ட வடிவம் ஆகும்.  பிறப்பறுக்கல்  உற்றார்க்கு உடம்பும் மிகை’’ என்னும் குறளுக்கேற்ப அமைந்த நிலை இது.  கைலை செல்ல முயன்றபோது இவ்வடிவத்தைக் கண்டவர் அஞ்சி வியப்புற்று ஓடினர்.  இந்நிலையில் அம்மையார் ஆண்டவன் என்னை அறிந்தால் போதும், மற்றவர்க்கு நான் எக்கோலத்தில் இருந்தால் என்ன?’’ என்று கேட்கிறார்.

கைலைக் காட்சி -

                கைலை சென்று இறைவனை வழிபட நினைத்த காரைக்கால் அம்மையார் கைலையை அடைந்ததும் அதனைக் காலால் நடந்து சென்று கடப்பது முறையன்று எனக் கருதித் தலையினால் நடந்து சென்றார்.  இக்காட்சியைக் கண்ட உமையம்மையார் சிவபெருமானை நோக்கித் தலையினால் நடந்திங்கேறிவரும் என்புருவ யாக்கையின் அன்பின் திறன் என்னை? என்று (1178) வியந்து கேட்கிறார்.  அதற்குச் சிவபெருமான் இவ்வாறு வரும் இவள் நம்மைப் பேணும் அம்மையார், இப்பெருமை சேர் வடிவம் வேண்டிப் பெற்றனர்’’ என்று கூறி அம்மையாரை நோக்கி. “அம்மையே’’ என்றழைத்தான்.  இந்தச் சொல்லைச் சேக்கிழார் செம்மை ஒருமொழி உலகமெல்லாம் உய்யவே அருளிச் செய்தார் சிவபெருமான்’’ என்கிறார்.  (1179) அம்மையாரும் சிவனை நோக்கிஅப்பாஎன்றழைத்து வணங்கினார்.  இவ்வாறு இறைவனாலேயே அம்மையே என்றழைக்கப் பெற்ற பெருமை காரைக்கால் அம்மையார் ஒருவருக்கே உண்டு.

பிறவாமையும் மறவாமையும் -

                சிவபெருமான் அம்மையாரை நோக்கி நம்பால் வேண்டுவதென்ன?’’ என்று கேட்க அதற்கு அம்மையார்,

                                இறவாத இன்ப அன்பு வேண்டிப் பின் வேண்டுகின்றார்

                                 பிறவாமை வேண்டும் , மீண்டும் பிறப்புண்டேல் உன்னை என்றும்

                                 மறவாமை வேண்டும், இன்னும்வேண்டும் நான் மகிழ்ந்து பாடி

                                 அறவா, நீ ஆடும்போது உன் அடியின்கீழ் இருக்க “(1781)  

என்றார். இறைவனும் திருவாலங்காட்டில் ஆடும் நடனக் காட்சியைக் கண்டு எப்போதும் பாடுவாய் நம்மை’’ என்று கூறுகிறார்.  அதற்கேற்ப அம்மையாரும் திருவாலங்காடு சென்று மூத்த திருப்பதிகம் பாடினார். திருவாலங்காட்டுப் பதிக்கும் அம்மையார் தலையாலே நடந்து வந்ததாகச் சேக்கிழார் குறிப்பிடுகின்றார்.  அம்மையார் இறைவனிடம் அழியாத அன்பையே முதலில் வேண்டுகின்றார். பின்பு பிறவாமை வேண்டுகின்றார்.  பிறப்பு இருக்குமானால் இறைவனை மறவாது இருக்கும் இயல்பு வேண்டுகிறார்.  இறைவன் திருநடனக் காட்சியை அருகில் இருந்து கண்டு திளைக்க வேண்டும் என்கிறார்.  கூடும் அன்பினில் கும்பிடலே அன்றி வீடும் வேண்டாத ‘‘(1431) சிறப்பினை அம்மையாரிடத்தில் காண்கிறோம்.

இருந்த கோலம் -

                திருக்கோயில்களில் உள்ள அறுபத்து மூன்று நாயன்மார்களில் திருவுருவச் சிலைகளை உற்று நோக்கினால் காரைக்கால் அம்மையார் திருவுருவம் மட்டுமே உட்கார்ந்து இருக்கும்.  அமர்ந்திருக்கும் நிலையில் காட்சி அளிக்கும். எல்லா நாயன்மார்களும் நின்ற கோலத்தில் இருக்க அம்மையார் மட்டும் அமர்ந்திருக்கும் கோலத்தில் காட்சி அளிக்கக் காரணம் என்ன? அவர் சிவபெருமானுக்கு மட்டுமல்ல, அவன் உருவத்தினைச் சிந்தையில் தாங்கி இருக்கும் சிவனடியார்களுக்கும் அம்மை என்பதைக் காட்டவா? அம்மையார் கைலையில் இறைவனிடத்தில் வரம் கேட்கும் போது நீ ஆடும் போது அடியின் கீழ் இருக்க’’ என்று கேட்டாரல்லவா? அதனால்தான் இறைவன் இவரை மட்டும் இருக்க’’ வைத்திருக்கிறான்.

மூவரும் போற்றும் முதன்மை -

                தேவாரம் பாடிய ஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர்  ஆகிய மூவரும் காரைக்கால் அம்மையாரிடம் பெருமதிப்பு வைத்துப் போற்றியுள்ளனர்.  திருஞான சம்பந்தர் தாம் மேற்கொண்ட தலயாத்திரையில் திருவாலங்காட்டுக்கு அருகே வந்தபோது , “இம்மையிலே புவியுள்ளோர் யாரும் காண ஏழுலகும் போற்றிசைப்ப எம்மை ஆளும் அம்மை திருத்தலையாலே நடந்து போற்றும் அம்மையப்பர் திருவாலங்காடாம் ‘‘ என்று கூறி,  அம்மையார் தலையாலே நடந்து சென்ற அப்பகுதியைக் காலால் மிதித்து நடக்க அஞ்சி நின்று பதிகம் பாடியதாகச் சேக்கிழார் (2911) கூறுகிறார்.  இங்கு ஞானசம்பந்தப் பெருமான் காரைக்கால் அம்மையாரை எம்மை ஆளும் அம்மைஎன்று அழைத்துப் போற்றியுள்ள செய்தியைக் காணுகிறோம்.  இறைனாலும் இறைவனடியாரும் அம்மை என அழைக்கப் பெற்ற பெருமை காரைக்கால் அம்மையார் ஒருவருக்கே உண்டு.  இறைவன் தாயமிலி தந்தையும் இலிஉலகிற்கெல்லாம் அம்மை அப்பன், அவன் காரைக்கால் அம்மையாரை அம்மை என அழைத்துள்ளான்.  ஞானசம்பந்தப் பெருமானுக்கோ ஞானப்பால் ஊட்டிய அம்மை அப்பன் திருத்தோணிபரத்து ஈசன். இருவரும் போற்றும் ஏற்றம் அம்மையாருக்குக் கிடைத்துள்ளது.  திருநாவுக்கரசர் தம் தேவாரத்தில் அம்மையாரின் கருத்து, சொல், கற்பனை ஆகியவைகளைப் பல இடங்களில் எடுத்து ஆள்கிறார் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.  (அழகப்பன். வெ.சு.-1987-167,168) “பூமாலை புனைந்தன்பாய்’’ என்பது அம்மையாரின் அற்புதத் திருவந்தாதித் தொடர். ( பா..87) நாவுக்கரசர் நிலைபெறுமாறு எண்ணுதியேல் ‘‘ என்ற பாட்டில் பூமாலை புனைந்து ஏத்திப் புகழ்ந்து பாடி’’ என்று கூறுகின்றார்.  சுந்தரர் தம் திருத்தொண்டத் தொகையில் (4)’பேயார்ககும் அடியேன்என்று போற்றுகின்றார்.

திருமுறைக்கு ஒரு பெண்மணி -

                சைவ சமயத் தோத்திர நூலாகிய திருமுறைகள் பன்னிரண்டும் பாடிய பெருமக்கள் இருபத்தேழு பேர்.  இவர்களில் காரைக்கால் அம்மையார் ஒருவர்தான் பெண்மணி.  ஏனையோர் ஆடவர்.  இந்த இருபத்தேழு பேரும் இருபத்தேழு விண்மீன்கள் எனக் கொண்டால் காரைக்கால் அம்மையார் ஒரு துருவ நட்சத்திரம் எனக் கூறலாம்.  காரைக்கால் அம்மையார் பாடிய அறபுதத் திருவந்தாதி, திரு இரட்டை மணிமாலை, திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகங்கள் ஆகிய மூன்றும் பதினோராம் திருமுறையில் திருவாலவாயாராகிய இறைவன் பாடலுக்கு அடுத்து வைத்துப் போற்றப் பட்டுள்ளன. ஏனைய திருமுறை ஆசிரியர்களுக்குப் பதிகப் பொருளையும், பலவகைப் பாட்டு நெறிகளையம், புதிய இலக்கிய வகைகளையும் காட்டி நின்ற பெருமாட்டி அம்மையார் அல்லவா? பதினோராம் திருமுறையிலேயே சேரமான் பெருமாள் நாயனார் பாடல்களில் காரைக்கால் அம்மையாரின் பாடலின் செல்வாக்கு இருப்பதைப் பார்க்கலாம்.  மேலும் நம்பியாண்டார் நம்பியும் திருத்தொண்டர் திருவந்தாதியில் காரைக்காலின் மேயகல தனமே’’ என்று அம்மையாரைப் பாராட்டுகிறார் (28)

தத்துவத்தின் தாய் -

                தமிழரின் தனிப்பெரும் தத்துவமாகிய சைவ சித்தாந்தம்’’ தொடர்பான அடிப்படைக் கருத்துகளுக்கும் வித்திட்டவர் காரைக்கால் அம்மையார் என்பர் அறிஞர். சித் என்றால் அறிவு.  அறிவைஅடிப்படையாகக் கொண்டது சைவ சித்தாந்தத் தத்துவ நெறி.

                                                அறிவானும் தானே அறிவிப்பான் தானே

                                                 அறிவாய் அறிகின்றான் தானே - அறிகின்ற

                                                 மெய்ப்பொருளும் தானே விரிசுடர்பார் ஆகாசம்

                                                 அப்பொருளும் தானே அவன் ‘‘ (அற்புதத் திருவந்தாதி -20)

இப்பாடலில் இறைவன் அறிவு வடிவாக அமைந்து உயிர்களுடன் ஒன்றாகவம் வேறாகவும் உடனாகவும் இருந்து இயங்கும் கருத்தை அம்மையார் கூறுவதைக் காணலாம்.  இவ்வாறு பல சான்றுகளைக் கூறலாம்.

அந்தாதி பாடிய அம்மையார் -

                அந்தாதி என்பது ஒருபாட்டின் அந்தமாகிய அதாவது இறுதியாகிய எழுத்தோ அசையோ சீரோ சொல்லோ அடியோ அடுத்த பாட்டின் ஆதியாக - தொடக்கமாக அமையப் பாடும் இலக்கிய அமைப்பாகும்.  இவ்வகை அமைப்பு பழந்தமிழ் இலக்கியங்களில் காணப் பட்டாலும் அந்தாதியை ஒரு நூலாக இலக்கியமாக காரைக்கால் அம்மையாருக்கு முன் யாரும் இயற்றவில்லை.  காரைக்கால் அம்மையார்தான் முதன் முதலில் அந்தாதி இலக்கியத்தை  இயற்றிப் பிற்காலத்து எழுந்த அந்தாதி இலக்கியங்களுக்கெல்லாம் தோற்றுவாய் செய்தார்.  காரைக்கால் அம்மையார் சிவபெருமானைப் பற்றி வெண்பா யாப்பில் செய்த நூலே அற்புதத் திருவந்தாதி ஆகும்.  இந்நூல் 101 வெண்பாக்களால் வந்து மண்டலித்து முடிகின்றது.  101ஆம் பாட்டு கடைக்காப்புச் செய்யுள். பாடலின் பொருள் 100ஆம் பாட்டுடன் முடிந்து விடுகிறது.  101ஆம் பாட்டின் இறுதிப்பகுதி முதற் பாட்டின் தொடக்கமாக அமைகின்றது.  இந்நூல் காணும் அனைத்து வெண்பாக்களும் இருவிகற்ப நேரிசை வெண்பாக்களாகும்.  இலக்கியம், தத்துவம் இரண்டும் அற்புதமாகக் கலந்த கலவையாக இந்நூல் அமைந்துள்ளது.  மேலும் அம்மையார் தம் வாழ்வில் நிகழ்ந்த அற்புதத்தை எண்ணிப் பாடிய நூல் இது . தமிழில் அகராதி இலக்கியத்திற்கு வித்திட்ட பெருமை காரைக்கால் அம்மையாரையே சாரும்.


இரட்டை மணிமாலை பாடிய ஏந்திழையார் -

                காரைக்கால் அம்மையார் சிவபெருமானைக் குறித்துத் திருஇரட்டை மணிமாலை என்னும் நூல் இயற்றியுள்ளார். இரட்டை மணிமாலை என்பது வெண்பா, கட்டளைக் கலித்துறை என்னும் இரண்டு வகைப் பாடல்கள் மாறி மாறி வந்து (மாலை போல்) அந்தாதி முறையில் அமைந்து இருபது பாடல்களைக் கொண்ட ஓர் இலக்கிய வகையாகும்.  அம்மையார் பாடிய இந்த இரட்டை மணி மாலையில் முதலில் கட்டளைக் கலித்துறையும் அடுத்து வெண்பாவுமாக மாறி மாறி வருகின்ற இயல்பைப் பார்க்கலாம்.  இந்த இருபது பாடல்களும் அந்தாதி முறையில் அமைந்துள்ளன.  இந்த இரட்டை மணிமாலை இறைவனைப் பற்றியதாதலால் திரு இரட்டை மணி மாலை எனப் பெயர் பெற்றது.  தமிழிலக்கியத்தில் பின் தோன்றிய இரட்டை மணி மாலைகள் எல்லாம் பாடப் பெற்றோரின் பெயரோடு இணைந்து வரும் இயல்புடையன.  இங்கு அப்படி இல்லை.  தமிழிலக்கியத்தில் இரட்டை மணி மாலை என்னும் இலக்கிய வகையையும் முதன் முதலில் தோற்றுவித்த பெருமை காரைக்கால் அம்மையாருக்கே சாரும்.  மேலும் கட்டளைக் கலித்துறை என்னும் புதிய யாப்பு வடிவச் செய்யுளைத் தமிழிலக்கியத்தில் முதன் முதலில் இயற்றிய பெருமையும் காரைக்கால் அம்மையாருக்கே உரியது.

மூத்த பதிகங்கள் பாடிய மூதாட்டியார் _

                பத்துப் பாடல்கள் ஒரு பொருள் பற்றி அமையும் நிலையினைப் பதிற்றுப் பத்து, திருக்குறள் முதலிய பழந்தமிழ் இல்கியங்களில் காண முடிகின்றது.  இம்முறையில் இறைவனைப் பாடு பொருளாகக் கொண்டு பாடிய நிலையில் பதிகம் எனும் இலக்கிய வகை உருவாயிற்று.  காரைக்கால் அம்மையார் திருவாலங்காடு என்னும் திருத்தலத்திலுள்ள சிவபெருமானைப் பாடுபொருளாகக் கொண்டு இரண்டு பதிகங்கள் இயற்றி உள்ளார்.  இவை திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகங்கள் எனப் பெயர் பெற்றன.  ஒவ்வொரு பதிகமும் 11 பாடல்களைக் கொண்டது.  இவற்றில் இறுதிப் பாடல் கடைக் காப்புச் செய்யுளாகும்.  இதனை நீக்கின் பத்துப்பாடல் எனக் கணக்கு அமையும்.  ஒவ்வொன்றும் ஆசிரிய விருத்தம் என்னும் யாப்பு வகைப் பாடலைக்கொண்டது.  மேலும்  இப்பதிகங்களுக்கு பண் வகுத்து வைத்துள்ள அருமையும் பெருமையும் அம்மையாரைச் சாரும்.  பிற்காலத்தில் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகியோர் பாடிய தேவாரத்தில் பதிகங்களுக்கு எல்லாம் முன்னோடியாக இருந்தவை காரைக்கால் அம்மையார் பாடிய திருவாலங்காட்டுத் திருப்பதிகங்களே ஆகும்.  எனவே காலத்தால் முந்திய இப்பதிகங்களை மூத்த திருப்பதிகங்கள் என முன்னோர் அழைத்தனர்.  இப்பதிகங்களில் காரைக்கால் அம்மையார் இறைவனுடைய திரு நடனத்தைப்பற்றி பேய்க்கணங்களின் வருணனையடன் பேசும் திறன் பாராட்டிற்குரியது.  பாடும் பொருள், யாப்பு, பண் அமைப்பு ஆகிய மூன்றின் வாயிலாகப் பிற்காலத்தில் தோன்றிய பக்தி இலக்கியத்திற்கு வழிகாட்டிய பெருமை காரைக்கால் அம்மையாரையே சாரும்.



முத்தமிழ் வித்தகி -

                இயல், இசை, நாடகம் என்னும் முத்தழிழறிவும் வாய்க்கப் பெற்ற வித்தகி காரைக்கால் அம்மையார்.  அற்புதத் திரு அந்தாதி, திரு இரட்டை மணி மாலை, திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகங்கள் வாயிலாக அம்மையாரின் இயற்றமிழ் புலமை வெளிப்படுகின்றது.  திருவாலங்காட்டுப் பதிகங்களுக்கு நட்டபாடை, இந்தளம் ஆகிய பண்களை வகுத்துள்ளார். எனவே அவருக்குள்ள .சைத் தமிழ்ப் புலமையை உணர முடிகிறது.  மேலும் இப்பகுதிகளில் இறைவன் திருநடனத்தின் பல்வேறு கூறுகளை இவர் பாடுவதன் வாயிலாக இவரது நாடகத் தமிழ்ப் புலமையை நாம் அறிய முடிகிறது.

புது நெறி காட்டிய பெருமாட்டி-

                பல்லவர் கால இலக்கியப் போக்கிற்கு வழிகாட்டி வைத்த பெருமை அம்மையார் அருளிச் செய்த பிரபந்தங்களுக்கே உண்டு.  அதனால் தமிழ்நாட்டுப் பெரும் புலவர் வரிசையில் வைத்து எண்ணத தக்க சிறப்பு வாய்ந்தவர் அவர் எனப் பாராட்டுகின்றனர் தமிழ் இலக்கிய வரலாற்றாசிரியர்கள்.  (செல்வநாயகம். வி. - 1960-61) நான்கு சிறிய நூல்கள் (அற்புதத் திருவந்தாதி, திரு இரட்டை மணிமாலை, திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகங்கள் 2) பாடியவர்தான் அம்மையார்.  எனினும் இலக்கியத்தின் பாடு பொருளாகிய உள்ளடக்கத்தாலும் யாப்பு நெறியாகிய உருவத்தாலும், கூறு முறையாகிய  உத்தியாலும், புதுமைகள் பல புகுத்தியவர் அம்மையார்.  இவர்க்கு முன் தோன்றிய சங்க கால இலக்கியங்கள் காதலையம், வீரத்தையும் பாடுபொருளாகக் கொண்டவை.  பின்னர்ச் சங்கம் மருவிய  சமய நூல்கள் அறநெறியை வலியுறுத்தும் இயல்பான இந்நிலையில் பக்தியைப் பாடு பொருளாகக் கொண்டு இலக்கியம் செய்த பெருமாட்டி அம்மையார்.  பின்னே பல்லவர் காலத்தில் தோன்றிய பக்தி இயக்கத்திற்கு முன்னோடியாக இருந்து வழிகாட்டிய பெருமை அம்மையாருக்கே உண்டு.  பக்தியில் தோததிர உணர்வையும் சாத்திர அறிவையும் காடடிப் பாடிய பெருமையும் அம்மையாருக்கு உண்டு.  பக்தி அனுபவங்களைப் பாடுவதற்குரிய யாப்பு நெறிகளாகக் கட்டளைக் கலித்துறை, விருத்தம் ஆகிய புதியயாப்பு வகைச் செய்யுள்களையம் முதன் முதலில் பாடியவர் அம்மையார்.  இவருக்கு முன் ஆசிரியப்பாவும் வெண்பாவும் கலிப்பாவுமே இலக்கிய உலகில் கோலோச்சின.  பின்னர் விருத்தம் என்னும் யாப்புப் பெருகிக் காப்பியப் பாவாக மாறுவதற்குக் காரணமாக இருந்தவர் அம்மையார்தான்.  கூறும் முறையிலும் அந்தாதி, இரட்டை மணி மாலை, பதிகம்  எனப் பலப்பல புதுவகை இலக்கிய வகைகளை உருவாக்கிப் பிற்காலத்தே இவ்வகை இலக்கியங்கள் தோன்றிட வழிகாட்டியாக இருந்தவர் அம்மையார் அல்லவா? எனவேதான் தமிழ் இலக்கிய வரலாற்றில் அம்மையார் ஒரு புதிய இலக்கிய மரபினையே ஆரம்பித்து வைத்தவர் எனப் போற்றப் பெறுகிறார்.

முடிவுரை -

                காரைக்கால் அம்மையார் சிவபெருமானுக்கும் சிவன் அடியார்களுக்கும் மட்டுமின்றித் தமிழிலக்கியத்திற்கும் தமிழ்த் தத்துவத்திற்கும் அம்மையாக, தாயாக’’ விளங்கி அற்புத ஆற்றல் பெற்றவர்.  இவரைத் தம் குல மூதாட்டியகாக் கொண்ட தனவணிகர் தழைக்க இறைவனை வேண்டுவோமாக.

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

துணை நூல்கள் -

அழகப்பன். வெ.சு, பதினோராந் திருமுறைத்திறன், காரைக்குடி, கண்ணம்மை பதிப்பகம்.

செல்வநாயகம். வி,தமிழ் இலக்கிய வரலாறு, யாழ்ப்பாணம்,ஸ்ரீலங்கா அச்சகம், 1960

பெரிய புராணம், சென்னை, சைவ சித்தாந்த சமாஜம், 1950.

பதினோராந் திருமுறை,திருப்பனந்தாள், காசிமடம், 1950. 

(பினாங்கு சிவன் கோயில் குடமுழுக்கு விழா மலர்)


                                                                                ¬¬¬¬¬¬-------------------------

Thinnappan, ‘Karaikkaal Ammaaiyar’ in ThirumuRai

              thantha PerumakkaL   Singapore, Thirumurai conference silver

              jubilee,  pp 71-77, 2005

      Thinnappan, SP. Ammaiyaar Arputam (The Place of

                                    Karaikkal) Ammaiyar in Tamil literature. In: Penang Sivan Temple Consecration Souvenir Magazine, Ed: Ray Ramasamy, Sivan Temple, Penang, Malaysia (1996) pp 56-61 (Tamil)




......தொடரும்.....


Dr S.P. Thinnappan












கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக