புதன், 11 ஜனவரி, 2017

சிங்கையின் சீர்தனைப் பேசு?


சிங்கையின் சீர்தனைப் பேசு?

(வரதராசன் . கி)  

(”நந்த வனத்திலோர் ஆண்டி”- மெட்டு)

 

சிங்கையின் சீர்தன்னைப் பேசு. - உறும்                                                  

செம்மைக்கு மேலும்நீ சேர்த்திடு தேசு.                                         பங்க மளிசெய்கை கூசு; - இந்தப்

     பண்பினில் நீங்கிடும் பாழளி மாசு. (1)
சிங்கைக்கு நிகரேதும் இல்லை; கொண்ட
     சிறப்புக் குமில்லை செப்பிட எல்லை.
இங்கிதம் கூட்டும்நற் சொல்லைமட்டும்  
இயம்புவர் மக்கள் இவர்க்கது முல்லை. (2)

அறநெறிப் பாதையில் செல்லு. - என்றும்                                    
அதுதனில் ஓங்கி அனைத்திலும் வெல்லு.
மறநெறி கண்டிடின் கொல்லு. – உன்னை
     மன்பதை மெச்சிடும் மாண்பினில் நில்லு. (3)

நெஞ்சத்தில் நீக்கிடு கள்ளம். - நின்று
     நிலைத்திடக் காண்பாய் களிப்பெனும் வெள்ளம்.
வஞ்ச மிலாதநல் லுள்ளம். – இந்த
     வழிதனை நீங்கினால் வாழ்வுறும் பள்ளம் (4).

எழிலுறும் சிங்கையாம் கூடு அதில்
     இணைந்துறைச் சிட்டுகள் யாமெனப் பாடு.
அழிவிலா அன்பினைத் தேடு. – கிட்டும்                                  அமைதியில் உண்பாய் அமிழ்தெனும் பீடு. (5)  
    
திறமையைத் துணையெனக் கொண்டு, வெற்றித்  
     தேனினை மாந்திட நீயாகு வண்டு.  
மறவனாம் உன்செயல் கண்டுஇந்த
     மாநிலம் உன்பணி மெச்சுதல் உண்டு. (6)

 

இன்ப நிலையெனும் ஊற்றுஅதை   

     இதயமாய் ஆக்கும் இலக்கினை ஏற்று,                                             அன்பு நெறிதன்னைப் போற்று. – அதை                                            

      அடைவதில் சற்றுமே போகாய்நீ தோற்று. (7)

கையூட்டு பேர்கொண்ட பூதம். - அது                                                   
கண்பட மாய்த்திடல் கற்றறி வேதம்.
மெய்யுறக் கொல்;இனப் பேதம் - இந்த                                                 மேன்மையை நீங்கிடின் உற்றிடும் சேதம். (8)

ஒற்றுமை தன்னையே நாடி, நித்தம்                                                   
உவந்து களிப்போம் உணர்வுடன் கூடி
எற்றைக்கும் இச்செம்மை பாடி, நல்ல                                                  இனிமையில் வாழ்வோம் இணைந்துற வாடி. (9)

வரிந்துநீ கட்டிடு கச்சை. -  என்றும்                                     வாடாமல் சிங்கையில் வைத்திடு பச்சை.  
அறிந்துநீ கற்றிடு விச்சை. – இந்த
     அவனியில் உச்சம் அதில்வைப்பாய் இச்சை . (10)

உலகினில் நாடொரு புள்ளி. - இதை
     உயர்த்திட நீயெழு நாளெலாம் துள்ளி.
விலகியே நீநில்லாய் தள்ளி - இன                                        வேற்றுமை கண்டிடின் வைத்திடு கொள்ளி. (11)

ஒற்றுமை இன்மையே நஞ்சு. – மக்கள்
     ஒன்றி உறைவதை ஓம்பிநீ கொஞ்சு.
குற்றம் புரிந்திட அஞ்சு. – கொண்ட  
     கொள்கையில் ஓங்கிக் குளிர்ந்திடு நெஞ்சு. (12)

பன்னுவேன் பாவிற்றேன் ஊற்றி. – ஒன்றிப்     
பழகிடும் மக்களின் பான்மையைச் சாற்றி.
உன்னத அன்பினைப் போற்றி - என்றும்
     உவப்பினில் நிற்பாய் உலப்பினை மாற்றி. (13)



நாட்டிற்குக் கண்டிடேன் ஈடு- அதன்
     நலமெண்ணி நித்தமும் நீபடு பாடு.
வாட்டம் அகற்றப்பல் மாடுஅவை                                       வரும்வழி தன்னை வகுத்துநீ தேடு.  (14)

திண்ணமாய் நீஓட்டு தீங்கு. – சிங்கைத்
     தேயத்தைத் தோளில் திடமுடன் தாங்கு.
வண்ணமே நாமுறும் பாங்குஅந்த                                       வழிதனில் சென்றுநீ வாழ்வினில் ஓங்கு. (15)

நின்றிடும் நம்பீடு வீங்கி- அந்த
     நிலைமைக்குக் காரணம் நித்திலச் சாங்கி.                                                மன்றெலாம் நற்பெயர் வாங்கி புகழ் 
     மண்டிடச் செய்தல் மறந்திடோம் தூங்கி. (16)

நாட்டிற்கு வாய்த்தார்நல் தந்தை. – எங்கள்                                                 நலமதை என்றென்றும் வைத்தார்தம் சிந்தை.

போட்டித் திறன்மிகு சந்தைஅதில்                                                         புகுந்துநாம் செய்தோம் புதுப்புது விந்தை.  (17)

 

இனச்சண்டை பேய்தன்னை வென்றோம். – என்றும்                                   

ஏற்றமளி பாதை எனக்கண்டு சென்றோம்.                                     

மனத்திடம் போற்றியே நின்றோம். – செம்மை                                                மாய்த்திடும் தீங்கதை மண்படக் கொன்றோம்.  (18)

 

உச்சம் அடையநீ முந்து. – நல்ல                                                          
உழைப்புடன் ஆர்வம் உளமுறத் தந்து.                                இச்சையுடன் ஓடி வந்து. – புவி                                                           
ஏத்திடும் உன்னை” - இயற்றினேன் சிந்து.  (19)

 

தேனினை நாடிடும் தும்பிஎன்ற                                         

       தெளிவினால் சொன்னேன் தேர்ந்துனை நம்பி.

வானினை எட்டுநீ எம்பி. – நல்ல                                                  

வாழ்விற்கு சொன்னேன் வழிபல தம்பி. (20)

 

சிரசினைச் சுற்றியோர் வட்டம்- ஒளி

     சேர்த்திட முன்னோர்கள் தீட்டினர் திட்டம்.
அரசினர் ஆக்கினார் சட்டம். – நல்ல  
     அமைதியின் பூங்கா அடைந்தோமப் பட்டம். (21)  

 

இதயத்தில் மாறாத ஏக்கம். – சற்றும்                                                  இடைவெளி இன்றி இருக்கட்டும் தாக்கம்.

முதலிடம் காண்பதே நோக்கம். – அந்த                                              முயற்சியில் ஒன்றித் துறந்திடு தூக்கம். (22)


நேர்மையே நாம்விடும் மூச்சு. – இந்த                                 நிலையினில் தாழ்ந்தால் நிம்மதி போச்சு.
கூர்மதி யாலெழும் பேச்சுகொண்ட 
கொள்கையால் மேன்மை குவிந்திட லாச்சு. (23)

தன்னலம் தன்னைநீ வீட்டு - இந்தத்                                                        தரணிக் குதவிட உன்கரம் நீட்டு.
மன்னும் கருணையே காட்டு - வரும்
மமதைக்கு முற்றாக வைத்திடு வேட்டு.  (24)

நலமளி சொல்லையே பன்னு. – சிங்கை
     நாடுறும் மேன்மையை நாடொறும் உன்னு.
திலகமாய் நீயென்றும் மின்னு. – உறும்                                                                   தீமையை மாய்த்திட நீவலை பின்னு. (25)

உள்ளத்தில் வைத்திடு தேடல். – மிக்க
     உவப்புடன் செய்வாய் உயர்வினை நாடல்.
கள்ள மிலாவிளை யாடல். – தன்னில்
     களித்திடல் உன்னிக் கழறினேன் பாடல்.  (26)



தொண்டுகள் நாட்டிற்குச் செய்வாய்முற்றும்                                              தூய்மையை நீயதில் துல்லியம் பெய்வாய்.
உண்டிட ஓர்கனி கொய்வாய். – அந்த
     உன்னத வெற்றியால் இப்புவி உய்வாய். (27)  

ஓங்கு வதில்வைப்பாய்  நாட்டம்பின்னர்                                       

     ஓர்துளி கூட உனக்கிலை வாட்டம்.                                         

தாங்கிட உண்டொரு கூட்டம். – அவர்                                     

தந்திடக் கொள்வாய் தரமிகும் ஊட்டம்.   (28)

 

பழியெனில் அஞ்சிநீ  ஓடு. -  இந்தப்                                                                                                                                           

பண்பிற்கு இல்லை பகர்ந்திட ஈடு.                                                                                                                                

இழிவளி பாதையை  மூடு –  மக்கள்                                                       இன்புறல் நாடி, எழுதுவுன் ஏடு. (29)

 

நேர்மையாம் பூச்செடி நட்டு, உண்மை                                                நீதியை நித்தம் உரமென இட்டு,

கூர்முளால் வேலிநீ கட்டு. – ”சற்றும்                                               குலைவுறாச் சட்டம்” - பெயரதற் கிட்டு.  (30)

 

 

சிந்து நயம் சிந்தும் வண்ணம் உள்ளது. பாடிக்காட்டினால் பதிவுசெய்தால் நன்றாக இருக்கும்

தலைப்பை மாற்றவேண்டும் சிலசொற்கள் கடினமாக உள்ளன.