வள்ளலார்
வழங்கும் பதவி
இவ்வுலகில் பதவியை
விரும்பாதவர் யார்? இறந்த பிறகும் பதவியை அடைய வேண்டும் என்னும் விருப்பத்தின்
விளைவு காரணமாகவே சிவலோக பதவி அடைந்தார். வைகுந்த பதவி அடைந்தார் என்று இறப்புச்
செய்திகளை அறிவிக்கும் போக்கு வளர்ந்துள்ளது. பதவியைப் பெறுவதற்குப் பலவகையான
முயற்சிகளில் ஈடுபடுவது மனித இயல்பாக இருக்கிறது.
தேவர்கள் கூடத் தம் பதவியைத் தற்காத்துக் கொள்ளவும், புதிய பதவியை -
இந்திரப் பதவி போன்றவற்றைப் பெறுவதற்கும் எவ்வளவோ முயற்சிகளில் ஈடுபட்டுள்ள
செய்திகளைப் புராணங்கள் பேசுகின்றன. தேவர்கள் மட்டுமா? சூரபன்மன், இரணியன், இராவணன்
முதலிய அரக்கர் தலைவர்கள் தத்தம் பதவிகளைத் தற்காத்துக் கொள்ளக் கடுந்தவம்
மேற்கொண்ட வரலாறுகளைப் புராணங்கள் எடுத்துரைக்கின்றன. பதவியை விடாமல் பிடித்துக்
கொண்டிருப்பவர்களைப் பதவி மோகம், பதவி ஆசை பிடித்து அலைகின்றவர்கள் என்று நாம்
பேசுகிறோம். இவ்வாறு பதவியின் மீது
பற்றுக் கொண்டிருக்கும் மனிதர்களுக்கு வள்ளல் பெருமான் இராமலிங்க அடிகளார் ஒரு
பதவி வழங்குகிறார். அப்பதவியைப் பற்றி
இக்கட்டுரையில் காண்போம்.
Malaysian Airlines System என்னும் மூன்று
சொற்களில் முதல் எழுத்துக்களாகிய M, A, S
ஆகியவற்றை இணைத்து MAS என்று அழைக்கிறோம். MAS என்பது மலாய்
மொழியில் தங்கம் என்னும் பொருளைத் தரும். இவ்வாறு ஒரு தொடர் சொற்களில் உள்ள முதல்
எழுத்துக்களைக் கொண்ட சொற்களை உருவாக்குவது மலாய் மொழியிலும் இந்தோனேசிய
மொழியிலும் ஒரு மரபாகப் போற்றப் படுகிறது. இதனை Acronym தலைப்பெழுத்துச்சொல் என்று மொழியியலார்
கூறுவர். சொற்களின் முதல் எழுத்துக்களைத் தொகுத்து உருவாக்கப்படும் புதுச்சொல்
என்று விளக்கம் தருவர் அறிஞர். இவ்வாறே வள்ளலார் வழங்கும் பதவி என்பதும் ஒரு
தலைப்பெழுத்துச் சொல்லாகும். பசித்திரு,
தனித்திரு, விழித்திரு என்னும் மூன்று சொற்றொடர்களின் முதல் எழுத்துக்களாகிய ப, த,
வி என்னும் மூன்றையும் இணைத்து வள்ளலார்
ஒரு புதுச் சொல்லை உருவாக்கி வழங்குகிறார். அந்தப் புதுச்சொல் தான் பதவி ஆகும்.
சிவபெருமான் மானைக் காட்டி மானைப் பிடிப்பது போல அவர் அடியாராகிய வள்ளலாரும்
மனிதர் விரும்பும் பதவியைக் காட்டி அவர்களை மாண்புடையவர்களாக ஆக்க முயல்கிறார்.
இவ்வுலகத்தில் உள்ள பதவிகள் அனைத்தும் மனிதரை மோகத்திற்குள் ஆழ்த்தும் இயல்பின,
மனிதனுக்கு ஆணவத்தையும் அகந்தையையும் ஏற்படுத்தும் தன்மையன. வள்ளலார் வழங்கும்
பதவியோ மனிதனைப் பக்குவப் படுத்திப் பண்புடையவனாக்கிப் பரமன் அடி சேர்க்கும்
பண்புடையது.
பசித்திரு -
வள்ளலார் வழங்கும்
பதவியின் முதலெழுத்து ப. இது பசித்திரு என்னும் சொற்றொடரின் முதல் எழுத்து, பசி
என்பது மனிதனுக்கும் மற்ற உயிரினங்களுக்கும் பிறந்தது முதல் இறப்பு வரை இருக்கின்ற
ஒன்றாகும். இந்தப் பசி ஒன்று இருப்பதால்தான்
உலக வளர்ச்சியே உருவாகியிருக்கிறது.
மனிதனுக்கும் மற்ற உயிரினங்களுக்கும் இருக்கும் பசி வயிற்றுப்பசி. இந்த வயிற்றுப் பசியைப் போக்கிக்
கொள்வதற்குத்தானே உயிர்கள் ‘பிழைப்பு‘ என்னும் தொழிலை நடத்துகின்றன. இந்தப் பசியைப் போக்கிக் கொள்ள மனிதனுக்கு உதவுவது
கூழ் உணவு. எனவேதான் வள்ளுவரும் ‘‘கூழியல்‘‘ என்னும் ஓர் இயல்
வகுத்துள்ளார். பொருட்பாலின் தொடக்கக்
குறளின் பொருள் என்பதனை விளக்க முற்படும்போது ‘‘படை குடி கூழ் அமைச்சு நட்பு அரண்
ஆறும் உடையான் அரசருள் ஏறு’’ என்று கூறிப் பொருள் என்பதன் ஆறு கூறுகளில் ஒன்றாகக்
கூழ் என்பது பற்றிப் பேசுகிறார். இங்கு
கூழ் என்பது பொருள் என்பதைக் குறிக்கும்.
பொருளியலுக்கு அடிப்படையே ‘‘கூழ்’- அதாவது
பொருளாதாரத்திற்கு அடிப்படையே கூழ் உணவு என்பது வள்ளுவர் கருத்து. எனவே உணவு தரும் உழவர்களை,‘‘உழுவார்
உலகத்தார்க்கு ஆணி’’ , ‘‘‘உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்’’ என்றெல்லாம் அவர்
போற்றுகின்றார். வாழ்க்கையில் நலம்
செய்யும் தொழிலை ‘‘வயிற்றுப் பிழைப்பு’’ என்று தானே அழைக்கிறோம். வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடிடும் உள்ளம்
கொண்டவர் வள்ளலார். எனவே மக்கள் பசியால்
வருந்தும வருத்தத்தைக் கண்டு மனம் பொறுக்காத நிலையில் நொந்து அவர் பாடிய
அருட்பாக்கள் பல உள்ளன. மேலும் வடலூரில் சத்திய தருமச் சாலை ஒன்றை நிறுவி அங்கு
வருவார்க்கு எல்லாம் வயிற்றுப் பசியைப் போக்க உணவளிக்கும் அறத்தைத் தொடங்கியவர்
வள்ளலார் அல்லவா? ‘‘மண்டிணி ஞாலத்து வாழ்வோர்ககு எல்லாம் உண்டி கொடுத்தோர் உயிர்
கொடுத்தோர் ஆவார்’’ என்று தானே மணிமேகலைக் காப்பியம் முழங்குகிறது. காரணம் என்ன?
மானம், குலம், கல்வி, வன்மை, அறிவுடைமை, தானம், தவம், உயர்ச்சி,
தாளாண்மை(முயற்சி), காமம் ஆகிய பத்தும் பசி வந்திடப் பறந்து போகும். பசியின்
இன்றியமையாமையை, பசியின் கொடுமையை உணர்ந்திட நாம் பசித்திருப்பது ஏன் என எண்ணிப்
பார்க்க வேண்டும்.
பசியைப் போக்கிக்
கொள்ள அறச்சாலையை ஏற்படுத்திய வள்ளலார் பசித்திரு என ஏன் சொல்கிறார்? உலக
வளர்ச்சிக்கு அடிப்படை மனிதனிடனிருக்கும் வயிற்றுப் பசியே. இந்த வயிற்றுப் பசி
அடங்கி விட்டால் மீண்டும் மீண்டும் தலையெடுக்கா விட்டால் மனிதன் முயற்சி மேற்கொள்ள
மாட்டான். உலக வளர்ச்சி,
முன்னேற்றத்திற்கு இடமில்லாமல் போயிருக்கும்.
மனிதனை முயற்சியில் ஈடுபடச் செய்யும் மாண்பு பசிக்குத்தான் உண்டு. எனவே பசித்திருப்பது மனித நாகரீக
வளர்ச்சிக்குத் தேவையான ஒன்றாகும்.
‘‘பசித்துப் புசி
என்பது பழமொழி’’ பசித்த பிறகுதான் உணவுண்ண வேண்டும். அதாவது முன்பு உண்டது நன்கு செரிமானம் ஆன பிறகு
தான் மீண்டும் பசி எடுக்க வேண்டும். அவ்வாறு பசித்த பிறகு ஒருவன் சாப்பிட்டானே
ஆனால் அவனுக்கு மருந்து தேவையில்லை. நீண்டநாள் அவன் வாழ முடியும். ‘மருந்தென
வேண்டாவாம் யாக்கைக்குஅருந்தியது அற்றது போற்றி உணின்’’, ‘‘அற்றது அறிந்து
கடைப்பிடித்து மாறல்ல துய்க்கத் துவரப் பசித்து,’’ ‘‘அற்றால் அளவறிந்து உண்க, அஃதுடம்பு பெற்றான்
நெடிது உய்க்கும் ஆறு’’ என்று வள்ளுவர் மருந்து என்னும் அதிகாரத்தில் இந்தக்
கருத்துக்களை வலியுறுத்துகிறார். இதனைத்
தானே இன்றைய மருத்துவர்களும் உடல் நலத்துடன் ஒருவன் நீண்ட நாள் வாழ்வதற்குரிய வழி
என்று கூறுகிறார்கள்.
பசித்திரு என்பது
வயிற்றுப் பசியை மட்டும் குறிக்கிறதா? மனிதனுக்கு மட்டும் இருப்பது அறிவுப்பசி,
ஞானப்பசி. இந்தப் பசிக்குரிய உணவு அளித்து
அவனை மேம்படச் செய்ய உதவுவது கல்வி. ‘‘தொட்டனைத்து ஊறும் மணற் கேணி மாந்தர்க்குக்
கற்றனைத்து ஊறும் அறிவு’’ என்பது குறள். உலகிற் கண்ணுடையவர்களாகக் கருதப் பெறுவர்
கற்றோர். மற்றோர் கண்ணிருந்தும் புண்ணுடையவராகவே எண்ணப் படுவர். எனவே கேடில் விழுச்செல்வமாகிய கல்வியைப்
பெறவேண்டும் என்னும் கருத்தை வலியுறுத்தவே வள்ளலார் அறிவுப் பசியோடு எப்போதும் இரு
என்று கூறுகிறார். கல்வி என்பது கரையற்ற ஒன்று.
சாகும் வரை படிக்க வேண்டும் என்பது வள்ளுவம். எனவே அறிவுப் பசியோடு அனைவரும் இருக்க வேண்டும்
என்பது வள்ளலார் வலியுறுத்தும் கருத்து.
எதனையும் தெரிந்து கொள்ள வேண்டும், அறிந்து கொள்ள வேண்டும் என்னும்
வேட்கையே அறிவுப் பசியாகும். இதனை ஆர்வம்,
தூண்டுகோல் ( interest) என்று இக்காலக் கல்வியியல் கூறும். ‘நானார், என் உள்ளம்
ஆர், ஞானங்கள் ஆர் அறிவார்’ என்று தத்துவ விசாரணை செய்வது ஞானப் பசியாகும். ஞானப் பசிக்கு
விருந்து நல்கவே வள்ளலார் வடலூரில் சத்திய ஞானசபை நிறுவினார். சத்தியத்தை அறிவது தானே மெய்ப்பொருளை உணர்வதுதானே அறிவின் ஞானத்தின் நோக்கம். ‘‘எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும்
அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு’’ என அறிவுக்கு விளக்கம் தருகிறது வள்ளுவம்.
தனித்திரு-
வள்ளலார் வழங்கும்
பதவியில் இரண்டாவது எழுத்து த. இது தனித்திரு என்னும் சொற்றொடரின் முதல் எழுத்து.
தனித்து இரு என்னும் தொடர் தனித்தன்மையடன் இருப்பது. உன்னத நிலையை - மேம்பாடு என்னும் நிலையை
வலியுறுத்துவதாகும். மனிதனுக்குரிய
தனித்தன்மை மனிதப் பண்புகளுடன் விளங்குவதாகும்.
தீக்குரிய தனித்தன்மை சுடுவதாகும்.
நீருக்குரிய தனித்தன்மை குளிர்ச்சியாகும்.
அதுபோல மனிதனுக்குரிய தனித்தன்மை மனிதப் பண்புகளுடன் விளங்குவதாகும். அன்பு
, நாண், ஒப்புரவு கண்ணோட்டம்,வாய்மை முதலிய பண்புகளைப் பெற்றிருப்பது மனிதத்
தன்மை. மனிதனுக்குரிய தன்மைகளில் ஒன்று அறிவுடைமை. அந்த அறிவுடைமை மக்கட் பண்பு பெறும் போதுதான்
மனிதத்தன்மை உருவாகிறது. ‘‘அரம்போலும் கூர்மையரேனும் மரம் போல்வர் மக்கட் பண்பு
இலாதவர் ’’ என்று வள்ளுவர் கூறுகிறார். மேலும் அறிவின் பயன் பிறிதொன்றின் துயர்
துடைப்பது தான். மற்ற உயிர்கள் படும்
துன்பம் கண்டு துடிப்பது தான் ‘‘அறிவினால் ஆவது உண்டோ பிறிதின் நோய் தன் நோய் போல்
போற்றாக் கடை’’ என்பது குறள். அதனையே
வள்ளலார் கருணை என்று அழைக்கிறார். அவர்
முழங்கிய தாரக மந்திரம் தனிப்பெருங்கருணை என்பது தான். இந்தக் கருணையே அருட்பெருஞ் சோதியாகிய ஆண்டவனை
அடைய வழியாகும்.
உலகப்
பற்றிலிருந்து விலகித் தனித்து நின்றால் இறைவன் திருவடியை அடைய முடியும். உலகம் ஆசைக் கடலில் ஆட்பட்டு அல்லல்
உறுகின்றது. மனிதன் இந்த ஆசைக்கு ஆட்படாது விலகி நின்று பற்றுக்களினின்று அகன்று
நின்று ஆண்டவனிடம் ஒன்றி நின்றால் அவன்
திருவருளைப் பெற முடியும். வள்ளலார் முதலிரவிலும் உலக நினலக்கு ஆட்படாது நின்று
திருவாசம் படித்துத் தனித்த நிலையில் நின்றவர் அல்லவா? அற்றது பற்று எனில் உற்றது
வீடு என்பது திருவாய்மொழி.
உலகில் வாழும்
ஒவ்வொருவரும் தனித்தன்மையுடன் விளங்கத் தானே விரும்புகிறார்கள். மற்றவர்க்கு இல்லாத ஒரு மாபெரும் சிறப்புத்
தமக்குக் கிடைக்க வேண்டும் என்று தானே முயல்கிறார்கள். தனித்தன்மை என்பதுதான் (distinction)
சிறப்பு நிலை (excellence) மேம்பட்ட நிலை, உன்னத நிலை என அழைக்கப் படுகின்றது. தனித்திரு என்பது மனிதனை உயர்ந்த நிலைக்கு
அழைத்துச் செல்ல உதவும் ஓர் தாரக மந்திரம்.
விழித்திரு -
வள்ளலார் வழங்கும்
பதவியின் மூன்றாவது எழுத்து வி. வி என்பது
விழித்திரு என்னும் சொற்றொடரின் முதல் எழுத்து. விழித்திரு என்பது தூங்காமல்
இருக்கும் நிலையையும் விழிப்பாக இருக்க வேண்டுவதன் தேவையையும் உணர்த்துகிறது.
மனித்ன து’ங்கிக் கொண்டே இருந்தால் . தூங்கும் நிலையில் இருந்தால் சாக்காடு என்று
பெயர். மனிதன் உயிருடன் இருக்கும் நிலைக்கு ஓர் அடையாளம் விழித்திருப்பது.
உறங்குவது சாக்காடு, உறங்கி விழிப்பது பிறப்பு, இறப்பு நிலை உறக்க நிலை. பிறப்பு நிலை விழிப்பு நிலை. பிறப்பு நிலை
சிறக்க வேண்டுமானால் மனிதன் விழிப்பு நிலையில் எப்போதும் இருக்க வேண்டும். சாகாக்
கலைக்கு - மரணமிலாப் பெருவாழ்வுக்கு வழிகாட்டியவர் வள்ளலார் அல்லவா?.
விழித்திரு என்பது
சோம்பேறியாக இருத்தல் கூடாது என்பதைச் சொல்கிறது. சுறுசுறுப்பாக எப்போதும் இருக்க
வேண்டும் , ஊக்கமுடன் திகழ வேண்டும் என்று வலியுறுத்தவே வள்ளலார் விழித்திரு என்று
கூறுகிறார். இதற்காக வள்ளுவப்
பெருந்தகையார் மடியின்மை, ஊக்கம் உடைமை என்று இரண்டு அதிகாரங்களை
வகுத்துள்ளார். குடும்பத்தைக் கெடுக்கும்
மாசு சோம்பல். சோம்பேறித்தனம் ஒருவனை மற்றவனுக்கு அடிமையாக்கி விடும். சோம்பேறித்தனம் மனிதனுக்குத் தூக்கத்தையும்,
மறதியையும், காலத்தைக் கடத்தும் இயல்பையும் தந்து வாழ்க்கையையே கெடுத்து விடும்.
எனவே வள்ளலார் வாக்காகிய விழித்திரு என்பது காலம் கடத்தும் பண்பு, மறதி, சோம்பல்,
தூக்கம் ஆகிய கேடுகளை விலக்கி இருக்க வேண்டும் என்று விளம்புகிறது. ‘நெடுநீர், மறவி,
மடி துயில் நான்கும் கெடுநீரார் காமக்கலன்’ என்பார்
வள்ளுவர். தீய பண்புகளை விலக்கித் தூய
பண்புகளுடன் வாழ்வதே விழிப்பு நிலையாகும்.
மேலும் விழித்திரு
என்பது தீய பண்புகள் தம்மைத் தொடர வரும்போது கவனமாக இருந்து விலக்க வேண்டும்
என்பதையும் காட்டுகிறது. ‘‘தீயவை தீய
பயத்தலால் தீயவை தீயினும் அஞ்சப்படும்’’ என்பது குறள். தீயவர்களிடம் நாம் கவனமாக
விழிப்பாக இருக்க வேண்டும். ‘‘மக்களே போல்வர் கயவர்’’ என்பார் வள்ளுவர். எனவே இத்தகையவர்களிடம் நெருங்காது விழிப்பாக
ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று வாழும் நெறியைக் கூறுகிறார் வள்ளலார்.
பதவிதரும் திரு
வள்ளலார் வழங்கும்
பதவி - பசித்திரு தனித்திரு விழித்திரு என்று மூன்று அறிவுரைகளை நமக்கு
நல்குகிறது. இச்சொற்றொடர்கள் இரு என முடிந்தாலும் திரு என ஒலியுடன்
திகழ்கிறது. வள்ளலார் வழங்கும் பதவியில்
நீடித்து இருப்பதால் நாம் பெறுவது திரு ஆகும். திரு என்றால் செல்வம் என்று பொருள். வள்ளலார் வழங்கும் பதவி தரும் செல்வம்
சிந்தையின் நிறைவாகிய பெருஞ் செல்வம். அது மட்டுமா? கேடும் ஆக்கமும் கெட்ட
திருவாகிய திருவருட் செல்வம் . அது மட்டுமா? ‘‘திருவே என் செல்வமே’’ என்று
திருநாவுக்கரசர் பெருமான் அழைக்கும் சிவஞானச் செல்வம் , இந்த மூன்று
செல்வங்களையும் பெறுவதற்கு வள்ளலார் வழங்கும் பதவி வழி வகுக்கின்றது. பசித்திரு, தனித்திரு, விழித்திரு ஆகிய
மூன்றின் வழி இப்பதவியைப் பெற நாம் முயன்றால் என்ன?
(சிங்கப்பூர் இந்து சபை - 10 வது இராமலிங்க சுவாமிகள் வள்ளலார் விழா (12-15 பிப்ரவரி 1993)
. ---------------------
இயற்கைக்கு
ஊறு செய்யாமை.
இயற்கை என்றால்
இயல்பாக உண்டானது என்று பொருள். இயற்கைக்கு மாறுபட்டது செயற்கை, அதாவது செய்யப்
பட்டது என்று பொருள். ‘‘கை புனைந்து இயற்றாக் கவின்பெறு வனப்பு’’ அதாவது கையால் செய்யப்படாத அழகுதான் இயற்கை
என்று கூறுகிறார் - நெற்றிக்கண் காட்டினாலும் குற்றம் குற்றமே் என்று
சிவடிபமானிடமே கூறிய சங்கத் தமிழ்ப் புலவர் நக்கீரர். நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்தும்
சேர்ந்ததே இயற்கை உலகமாகும். இவற்றைப்
பஞ்ச பூதம் (ஐம்பேரியற்கைக்கூறுகள்) என்று அழைப்பார்கள். இவை மனித வாழ்வுக்கு
இன்றியமையாதவை. இவற்றிறிகுத் தீங்கு
விளைவிப்பது அதாவது ஊறு செய்வது மனித வாழ்விற்கே கேடு செய்வதாகும். எனவேதான் இப்போது ஒவ்வொரு நாட்டிலும்
சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு என்பது வலியுறுத்தப் படுகிறது.
பூமியைப் போற்றுங்கள் -
நிலமே நாம்
வாழும் பூமியாகும். பூமியைப் போல் பொறுமையானது வேறு ஒன்றும்
இவ்வுலகில் இல்லை. நாம் தோண்டினாலும்,
வெட்டினாலும் பூமி நம்மைக் கோபிப்பதில்லை.
எனவேதான் திருவள்ளுவர், ‘‘அகழ்வாரைத் தாங்கும் நிலம் போலத் தம்மை இகழ்வார்ப்
பொறுத்தல் தலை’’ என்று பூமியைப் பொறுமை உடையவர்க்கு உவமையாகச் சொல்கிறார். மேலும் தமிழர்களாகிய நாம் பூமியைத்
தெய்வமாகவும் கருதிப் பூமாதேவி எனப் போற்றி வணங்குகிறோம். உலக மக்களும் ‘‘பூமி தினம்’’ கொண்டாடத் தொடங்கி
விட்டார்கள். நிலத்தைத் தேவை இல்லாமல்
தோண்டவோ வெட்டவோ கூடாது. மேலும் குப்பை
கூளங்களைப் போட்டு அசிங்கப் படுத்தக் கூடாது. பிளாஸ்டிக் முதலிய வேண்டாத பொருள்களைப் பூமிக்குள் புதைத்து
நிலத்தை வெறும் புதைகுழியாக்கக் கூடாது.
தமிழர்கள்
நிலத்தைக் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என நான்கு வகையாகப் பிரித்து
நானிலமாகக் கண்டனர். குறிஞ்சி என்பது
மலைப் பகுதியாகும். முல்லை என்பது
காட்டுப் பகுதியாகும். மலையும் காடும்
இருந்தால் ்தானே மழை பெய்யும். மலையையும்
காட்டையும் கட்டிடங்கள்,சாலை முதலியவற்றை அமைப்பதற்காக அழித்துவிடக் கூடாது. இவற்றில் எத்தனை எத்தனையோ மருந்துச் செடிகள்,
மூலிகைகள் இருக்கும். அவற்றை அழித்தால்
நோய் தீர்ப்பது எப்படி? மருதம் என்பது வயல் பகுதியாகும். வயலை அழித்து விட்டு வீடு, சாலை அமைக்கும்
நிலமாக்கினால் நமக்கு எப்படி நெல் முதலிய உணவுப் பொருள் கிடைக்கும்? உணவில்லாமல்
உயிர் வாழ முடியுமா? நெய்தல் என்பது கடல் பகுதியாகும். நாம் வாழும் உலகில் முக்கால் பகுதி கடலே. கடலில் நச்சுப் பொருள்கள், அழுக்கு நீர்,
தொழிற்சாலைக் கழிவுப் பொருள்கள், சாக்கடை முதலியனவற்றைக் கலக்க விடக் கூடாது. இதனால்
மீன்வளம் முதலிய கடல் வளம் அழிந்துவிடும்.
நீரை நீள நினையுங்கள் -
தண்ணீர் நம்
தாகத்தைத் தீர்க்கும் குடி நீராகவும்
இருக்கிறது. அதே சமயத்தில் நம்
பசியைத் தீர்க்கும் உணவுப் பொருளை விளைவிக்க உறுதுணையாகவும் உள்ளது. எனவே தான் திருவள்ளுவர் ‘‘நீர் இன்றி அமையாது
உலகு’’ என்று கூறுகின்றார். வான் சிறப்பு
என்னும் அதிகாரம் முழுவதும் தண்ணீரின் பெருமையைப் பற்றித்தான் அவர்
சொல்கிறார். தண்ணீர் தரும் ஆறு, குளம்,
ஏரி, கிணறு ஆகியவற்றை நாம் அசுத்தப் படுத்தாமல் தூய்மையாக வைத்துக் கொள்ளப் பாடுபட
வேண்டும். சாக்கடை முதலிய கழிவு நீரினால்
கொசு முதலிய நோய்க் கிருமிகள் உற்பத்தியாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தண்ணீரை விணாக்கமல் இருப்பதும் முக்கியமாகும்.
தீயைத் தீண்டாதீர்கள் -
தீ மனிதனுக்குத்
தேவையான வெப்பத்தையும் ஒளியையும் தரும் பொருளாகும். அதே சமயத்தில் தீ விபத்தையும் தரும். உலகத்தையே அழக்கும் ஆபத்தான பொருளுமாகும். ‘‘தீயினும் அஞ்சப்படும் ’’ என்று திருவள்ளுவர்
ஓரிடத்தில் தீயின் கொடுமையைக் குறிப்பிடுகிறார்.
எனவே நாம் தீயோடு விளையாடக் கூடாது. அதாவது வெடிகுண்டு, அணுகுண்டு,
துப்பாக்கிக் குண்டு முதலிய நவீன போர்க் கருவிகளைக் கொண்டு பயங்கரவாதச் செயல்களில்
ஈடுபட்டு உலகை அழித்து அமைதியைக் குலைத்து விடக் கூடாது.
காற்றைக் காப்பாற்றுங்கள் -
காற்று இல்லாமல்
உயிரினங்கள் மூச்சுவிட முடியாது.
தாவரங்களும் வாழ முடியாது. எனவே நாம் நம் சுற்றுப் புறத்திலுள்ள காற்றைத்
தூய்மையாக வைத்துக் காப்பாற்ற வேண்டியது நம் மாபெரும் கடமையாகும். புகை பிடித்தல், தொழிற்சாலை நச்சுவாயு முதலியவை
காற்றைக் கெடுக்கும். அவற்றைத் தடுக்க
வேண்டும். மரம் ,செடி, கொடிகளை அழிக்காமல்
வளர்த்தால் நமக்குத் தேவையான பிராண வாயு மிகுதியாகக் கிடைக்க வழி ஏற்படும்.
ஆகாயத்தைக் காயப் படுத்தாதீர்கள் -
ஆகாயத்தில் தான்
சூரியன், சந்திரன் முதலிய கோள்கள்,நடசத்திரங்கள் உள்ளன. வான வெளியையும் நாம் தூய்மையாக வைத்திருக்க
வேண்டும். மழை தரும் மேகங்களையும் போற்ற
வேண்டும். ஆகாயத்தின் வழியே தான் ஒலி, ஒளி
அலைகள் ஊடுருவுகின்றன. தேவையற்ற
பேரிரைச்சலை உண்டாக்கி ஒலி ஊடுருவலைக் கெடுக்கக் கூடாது. இவற்றால் காது
செவிடாகும். இவ்வாறே கண்ணுக்கு ஊறு செய்யும் பேரொளியையும் உண்டாக்கக் கூடாது.
இயற்கையோடு இணைந்து வாழுங்கள் -
நிலம், நீர், தீ,
காற்று, ஆகாயம் ஆகிய ஐம்பூதங்களால் ஆகிய இயற்கைக்கு ஊறு விளைவிக்காமல் இயற்கையோடு
இணைந்து வாழ்ந்தால் நாம் இன்பமாக என்றும் வாழலாம். விஞ்ஞான முன்னேற்றம் என்ற பெயரால் இயற்கைக்கு
விரோதமாகச் செயல்படுவது அஞ்ஞானமாகும்.
இயற்கையில் இறைவனைக் கண்டு வழிபடுவது மெய்ஞ்ஞானமாகும்.
‘‘பாரிடை
ஐந்தாய்ப் பரந்தாய் போற்றி
நீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி
தீயிடை
மூன்றாய்த் திகழ்ந்தாய் போற்றி
வளியிடை இரண்டாய் மகிழந்தாய் போற்றி
வெளியிடை ஒன்றாய் விளைந்தாய் போற்றி.
(திருவாசகம்
(பேச்சுப் போட்டியில் கலந்துகொள்ளப் பேரன் குமார்க்காக
எழுதியது)
நலந்தரும்
வாழ்வுக்கு வளந்தரும் எண்ணங்கள்.
நலந்தரும் வாழ்வு
என்றால் என்ன? வளந்தரும் எண்ணங்கள்
என்றால் என்ன, இரண்டுக்கும் இடையே என்ன தொடர்பு? என மூன்று வகையாக இந்தத்
தலைப்பைப் பார்க்கலாம்.
நலந்தரும் வாழ்வு என்றால் என்ன?
உடல்நலம், உயிர்
நலம் , உள்ள நலம் , உற்றார் உறவினர் நலம், ஊர் நலம், நாட்டு நலம், உலக நலம் எல்லாம்
சேர்ந்தால் தான் நம் வாழ்வு நலந்தரும் வாழ்வாக அமையும். உடல் நலம் பெறச் சீரான
உணவும் நல்ல உடற் பயிற்சியும் தேவை.
உயிர்நலம் பெற நல்ல காற்றும் மூச்சுப் பயிற்சியும் (பிரணாயாமம்) தேவை.
உள்ளம் நலம் பெறப் பொறாமை, ஆசை, கோபம், கடுஞ்சொல் ஆகியவற்றைப் போக்கி நல்ல
பழக்கங்களை மேற்கொள்ள வேண்டும். உற்றார்
உறவினர் நலம் பெற நாம் உதவி செய்ய வேண்டும்.
நாடு நலம் பெற நாம் தன்னலம் பாராது உழைக்க வேண்டும். உலக நலம் பெற நாம் உலக மக்களுடன் உறவுகொள்ள
வேண்டும்.
வளந்தரும் எண்ணங்கள் என்றால் என்ன?
எண்ணுதல் அதாவது
சிந்தித்தல் என்பது மனிதனுக்கு மட்டுமே உரிய பண்பு. சிந்தனை வளம்பெற நாம் நிறையப்
படிக்க வேண்டும். நூல் பல கல் என்பது
ஔவையாரின் ஆத்திசூடி அல்லவா? அறிஞர்களின் சொற்பொழிவுகளைக் கேட்க வேண்டும்,
சான்றோர்களுடன் பழக வேண்டும்இ. நல்ல நண்பர்களின் சேர்க்கை இருக்க வேண்டும். எதிர்மறை
எண்ணங்களை விட்டு நல்லனவற்றையே சிந்திக்க வேண்டும். இறை நம்பிக்கை, தியானம் போன்றவை வளந்தரும்
எண்ணங்களைத் தரும்.
இரண்டுக்கும் என்ன தொடர்பு?
எண்ணம் தானே
வாழ்வு. வாழ்வு செயல்களை மையமாகக்
கொண்டதுதானே? எண்ணம் தானே செயல்களுக்கு
அடிப்படை. நல்ல எண்ணங்கள் நற்செயல்கள்
செய்யவும், தீய எண்ணங்கள் தீய செயல்கள் செய்யவும் தூண்டும். காந்தி மூன்று
குரங்குகளை மேசையில் வைத்திருப்பாராம்.
ஒன்று காதை மூடிக் கொண்டிருக்குமாம், மற்றொன்று கண்ணை
மூடிக்கொண்டிருக்குமாம், இன்னொன்று வாயைப் பொத்திக் கொண்டிருக்குமாம். இதற்கு என்ன அர்த்தம்? தீயனவற்றைக் கேட்காதே, தீயனவற்றைப் பார்க்காதே,
தீயவற்றைப் பேசாதே என்பதுதானேஃ இதன்படி இருந்தால்
வளமான எண்ணங்கள் ஏற்பட வழி உண்டாகும்.
சிந்தனை வளத்திற்கேற்ப நம் வாழ்வும் செழிக்கும். நலம் பெறும்.
உயர்ந்த எண்ணங்கள் நம் வாழ்வை உயர்த்தும்.
தாழ்ந்த எண்ணங்கள் நம்மையே தாழ்த்தும், படுகுழியில் தள்ளும். வளமான எண்ணங்களை உருவாக்கவும் அதன்வழி நலமான
வாழ்வை நாம் பெறவும் பிரம சமாஜம் போன்ற அமைப்புகள் பெருந்துணை புரிகின்றன.
நேரம்
நல்ல நேரம்.
பெரியோர்களே!
தாய்மார்களே !நண்பர்களே! உங்கள்
அனைவருக்கும் வணக்கம். இப்போது நான் நேரம்
நல்ல நேரம் என்னும் தலைப்பில் இங்கு பேச வந்துள்ளேன்.
நேரம் ,பொழுது,
காலம், பருவம் என்பன ஒரு பொருளை உணர்த்தும் பல சொற்கள். இவற்றிற்கு ஒட்டு மொத்தமாக (time, season) என்று ஆங்கிலத்தில் பொருள் உரைக்கலாம். நேரத்தை
எவ்வாறு நல்ல நேரமாக ஆக்கலாம் என்பதை இங்கு விளக்குகிறேன்.
நேரம் பொன்
போன்றது. போனால் திரும்ப வராது. எனவே நேரத்தை வீணாக்காமல் நன்கு
பயன்படுத்தினால் அது நல்ல நேரமாக அமையும்.
ஒரு காரியத்தைச் செய்யும்போது குறித்த நேரத்தில் தொடங்கிக் குறித்த
நேரத்தில் திட்டமிட்டு முடிக்க வேண்டும்.
சோம்பேறியாக இருந்து எதனையும் ஒத்திப் போடக் கூடாது. சோம்பர் என்பர் தேம்பித் திரிவர் என்பதும்
செய்வன திருந்தச் செய் என்பதும் ஔவை மூதாட்டி வாக்கல்லவா?
நேரம் தவறாமை
அதாவது (punctuality) என்பதை நாம் நம் வாழ்வில் கடைப்பிடித்தால் நாம் வெற்றி
அடையலாம். Work while you work, Play while you
play
என்பதற்கேற்ப எந்த நேரத்தில் எதைச் செய்ய வேண்டுமோ அந்த நேரத்தில் அதைச்
செய்ய வேண்டும்.
‘‘காலை
எழுந்தவுடன் படிப்பு
பின்பு கனிவு கொடுக்கும் நல்லபாட்டு
மாலை முழுதும் விளையாட்டு என்று
வழக்கப் படுத்திக் கொள்ளு பாப்பா’’
என்று பாப்பாவுக்கு அறிவுரை கூறுகிறார் பாரதியார். நாம் நாள்தோறும் அன்றாடம் நடத்திய பாடங்களைப்
படித்து வந்தால் தேர்வுக் காலத்தில் சுமையாக இருக்காது. எளிதாக இருக்கும். கவலை இல்லாமல் தேர்வு எழுதலாம். இப்படிச் செய்தால் எந்த நேரமும் மாணவர்களாகிய
நமக்கு இன்பம் தரும் நல்ல நேரமாகும்.
மேலும் இளமைப் பருவமே கல்வி கற்பதற்கு
நல்ல காலமாகும். இளைமையில் கல்வி சிலையில்
எழுத்து அல்லவா?
விவசாயம்
செய்பவர்களும் கூட நேரம் பார்த்து, பருவம் பார்த்துப் பயிரிட வேண்டும்.
மழைக்காலம், வெயிற்காலம் என்றெல்லாம் பார்த்துப் பயிர் செய்தால்தான் அவர்கள்
விவசாயம் நன்கு பலன் தரும். அதனால் தான்
‘‘பருவத்தே பயிர் செய், ஆடிப் பட்டம் தேடி விதை’’ போன்ற பழமொழிகள் தோன்றின.
காலம் என்பது
பெரும்பொழுது, சிறுபொழுது என இரு வகைப்படும்.
இவற்றில் பெரும் பொழுது கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில்,
முதுவேனில் என்னும் ஒர் ஆண்டின் ஆறு பருவத்தை - காலத்தை உணர்த்தும். சிறுபொழுது என்பது ஒரு நாளின் பகுதிகளாகிய
வைகறை, விடியல், நண்பகல், எற்பாடு, மாலை, யாமம் என்னும் ஆறையும் உணர்த்தும்.
திருக்குறளில்
காலம் அறிதல் என்னும் ஓர் அதிகாரம் உள்ளது.
இது அரசியல் என்னும் பகுதியில் இருக்கிறது. ‘‘பருவத்தொடு ஒட்ட ஒழுகல்
திருவினைத் தீராமை ஆர்க்கும் கயிறு’’ அதாவது ஓர் அரசன் தன் செல்வம் அழியாமல்
இருக்கக் காலத்தைப் போற்றி வாழவேண்டும் என்று இந்தக் குறளில் திருவள்ளுவர்
வலியுறுத்துகிறார். இவ்வாறு செய்வதால்
அவனுக்க நல்ல காலம் பிறக்கும் அல்லவா? ‘‘ஞாலம் கருதினும் கைகூடும் காலம் கருதி
இடத்தாற் செயின்’’ என்னும் குறளில் ஓர் அரசன் உலகம் முழுவதையும் ஆள நினைத்தாலும்
அவன் காலத்தைப் போற்றிச் செயல் பட்டால் ஆளலாம் என்று வள்ளுவர் கூறுகிறார். காலம் கருதிச் செயல்பட்டால் செய்வதற்கு அரிய
செயல் ஒன்றுமில்லை என்பது அவர் கருத்து.
நல்ல நாள் பார்க்க
நாம் பஞசாங்கத்தைப் பார்க்கிறோம்.
பஞசாங்கத்தினபடி நல்ல நாள் அல்லாத ஒரு நாளை நல்ல நாளாக ஆக்குவது எப்படி?
இதற்கு நாம் திருமுறை ஆசிரியர்கள் ஒரு வழி காட்டியுள்ளார்கள். அது என்னவென்று பார்ப்போம். திருமறைக்காடு
என்னும் வேதாரண்யத்தில் திருஞான சம்பந்தரும், திருநாவுக்கரசரும் தங்கி
இருந்தார்கள். அப்போது பாண்டிய நாட்டின்
அமைச்சர் குலச்சிறையார் அங்கு வந்தார்.
‘‘பாண்டிமாதேவி மங்கையர்க்கரசியார் தங்களைப் பாண்டி நாட்டுக்கு வந்து சமண
சமயத்தை ஒழித்துச் சைவ சமயத்தை நிலைநாட்ட அழைத்துவரச் சொன்னார்’ என்று
திருஞானசம்பந்தரிடம் குலச்சிறையார்
கூறினார். இதனைக் கேட்ட திருஞான சம்பந்தர்
உடனே மதுரைக்குப் புற்ப்பிடத் தயாரானார்.
அப்பொது அருகே இருந்த திருநாவுக்கரசர் ‘‘இன்று நாளும் கோளும் அதாவது நாளும்
கிரகமும் நன்றாக இல்லை’’ என்று கூறுகிறார்.
உடனே திருஞானசம்பந்தர் ‘‘வேயுறு தோளி பங்கன்’’ என்று தொடங்கும் கோளறு
பதிகத்தைப் பாடிச் சிவனடியார்களுக்கு நாளும் கோளும் நட்சத்திரங்களும் நல்லனவாகவே
அமையும் என்று கூறிப் புறப்படுகின்றார்.
எனவே நாமும் இந்தப் பதிகத்தைப் பாடி வழிபட்டால் நவக்கிரக தோஷங்களும், வார
தோஷங்கள், திதி தோஷங்கள், நட்சத்திர தோஷங்கள், யோக தோஷங்கள், கரண தோஷங்கள் ஆகிய
பஞ்சாங்க தோஷங்களும் கண்டிப்பாக நீங்கிவிடும். ஆகையால் பஞ்சாங்கப்படி ஒருநாள் நல்ல
நாளாக இல்லாவிடில் அதை நல்ல நாளாக மாற்ற இப்பதிகத்தைப் பாடி வழிபட வேண்டும். இராகு காலம், எமகண்டம் போன்ற தீய நேரங்களை நல்ல
நேரமாக மாற்றவும் இதுவே வழி. இவ்வழியே நம்
திருமுறை ஆசிரியர்கள் காட்டிய நல்வழி. நல்ல நாளில்லை என்று செயலாற்றுவதைத் தள்ளிப்
போடாமல் இவ்வழியைப் பின்பற்றி முனைப்புடன் செயல்படுவோமாக. நாளும் கோளும்
நலிந்தோர்க்கில்லை என்று சொல்லி என் சிற்றுரையை முடித்துக் கொள்கிறேன். நன்றி.
---------------------------
(பேச்சுப் போட்டியில் கலந்துகொள்ளப் பேரன் குமார்க்காக
எழுதியது)
பட்டினத்தார் ஒரு
பார்வை
பெருமதிப்புக்குரிய
நகரத்தார் பெருமக்களே! பேரன்புக்குரிய ஆச்சிமார்களே! வணக்கம். பட்டினத்தார் ஒரு பார்வை என்னும் தலைப்பில்
பேசப் போகிறேன். பார்வை என்னும் சொல்லுக்குள்ளே பார் - வை
என்னும் இரண்டு சொற்கள் ஒளிந்துள்ளன. எனவே
பட்டினத்தாரைப் பாருங்கள், அவர்காட்டிய வழியை உங்கள் கருத்தில் வையுங்கள் என்று
இரு பகுதிகளாக என் பேச்சு அமையும்.
பட்டினத்தார் நம் நகரத்தார் மரபைச் சார்ந்தவர். நகரத்தார் சமூகத்திற்கு ஒரு தனிப் பெருமை
உண்டு. தாயும் தந்தையும் இல்லாத சிவபெருமானுக்கே
தாயையும் தந்தையையும் தந்தவர்கள் நகரத்தார்கள். எப்படி என்று கேட்கறீர்களா?
காரைக்கால் அம்மையார் நம் நகரத்தார் சமூகத்தில் தோன்றியவர். அவர் கைலாசத்திற்குத்
தலையால் நடந்து செல்லும் பொழுது சிவபெருமான் உமை அம்மையாரிடம் காரைக்கால்
அம்மையாரைப் பாரத்துத் தனக்குத் தாய் என்று , ‘‘இவள் நம்மைப் பெணும் அம்மை காண்’’ என்று
கூறி அறிமுகம் செய்கிறார். அதுபோலப்
பட்டினத்தாராகிய திருவெண்காடருக்குத் திருவிடை மருதூரில் உள்ள சிவபெருமான்,
மருதவாணன் என்னும் பெயரில் வளர்ப்பு மகனாக
வந்து, அவரைத் தந்தையாக உறவு கொண்டாடினான்.
கப்பல் பயணம் செய்து திரைகடல் ஒடித் திரவியம் தேடிய மருதவாணன் இறுதியில்
தன் தந்தையாருக்குக் ‘‘காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே’’ என்று எழுதி
வைத்து விட்டு மறைந்தான். இதனையே குரு
வார்த்தையாகக் கொண்ட பட்டினத்ததார் தம் பெருஞ் செல்வத்தையும் துறந்து ஓடு ஏந்திப்
பிச்சை ஏற்று உண்ணும் பெருந்
துறவியயானார். பிறகு திரு ஒற்றியூர்
சென்று கரும்பும் கசந்த நிலையில் சிவனடி
சேர்ந்தார்.
பட்டினத்தார் என்ற
பெயர் எப்படி வந்தது தெரியுமா? நம் முன்னோர்கள் வாழ்ந்த நகரமாகிய
காவிரிப்பூம்பட்டினத்தில் பிறந்து விளங்கிய காரணத்தால் தான் இப்பெயர் இவருக்கு
வந்தது. இவர் அப்பச்சி பெயர் சிவநேசச்
செட்டியார். ஆத்தா பெயர் ஞானகலை ஆச்சி.
பட்டினத்தாரைப் பார்த்தோம். இனி இவர்
காட்டிய வழியைக் கருத்தில் வைப்போம்.
பத்தாம்
நூற்றாண்டில் வாழ்ந்த பட்டினத்தார் பதினோராம் திருமுறையில் சிவடிபருமானைப்
போற்றிப் பல பாடல்கள் பாடியுள்ளார்.
அன்பினால் ஆண்டவனை அடைய முடியும்.
அடியார்களோடு எப்போதும் இணங்கி இருக்க வேண்டும், சிவடிபருமானின் நாமமாகிய
நமசிவாயமந்திரத்தை மறவாமல் ஓத வேண்டும்.
இல்லற வாழ்வில் ஈடுபடடாலும் சிவ நாமத்தை மறவாமல் கடைப்பிடிக்க
வேண்டும். இவை எல்லாம் பட்டினத்தார் காட்டிய
வழி. துறவியாக இருந்தாலும் தம் தாயார்
இறந்த போது அவருக்கு இறுதிக் கடன் செய்ய ஓடிவந்தார் பட்டினத்தார். மேலும் தமிழர்கள் கண்ட தத்துவமான சைவ
சித்தாந்தம் என்னும் சொல்லை முதன் முதலில் கையாண்டவரும் பட்டினத்தாரே. பட்டினத்தாரைப் போலச் சிறந்த துறவி வேறு யாரும்
இல்லை என்று பாராட்டுகிறார் தாயுமானவர்.
எனவே பட்டினத்தார் வாழ்க்கையைப் பாருங்கள், அவர்்காட்டிய வழியைக் கருத்தில்
வையுங்கள். இதுவே பட்டினத்ததார் ஒரு
பார்வை என்னும் தலைப்பின் பொருளாகும்.
நன்றி.
(பேச்சுப் போட்டியில் கலந்துகொள்ளப் பேரன் குமார்க்காக எழுதியது)
கட்டுரை எண் 26 பஞ்சாங்கம் - ஒரு
பார்வை.
புத்தாண்டு தொடக்க நாளன்று நம் திருக்கோயில்களில்
பஞ்சாங்கம் படிப்பது தொன்று தொட்டு இருந்துவரும் ஒரு வழக்கமாகும். திருமணம் முதலிய மங்கல நிகழ்ச்சிக்கு உரிய நல்ல நாளைக்
கணிக்கவும் சோதிடம் பார்க்கவும் நாம் பஞ்சாங்கத்தையே
அடிப்படையாகக் கொள்கிறோம். இந்நிலையில் பஞ்சாங்கம் என்றால் என்ன என்பதைத் தெரிந்து கொள்வது நல்லது தானே.
பஞ்சாங்கம் என்னும் சொல் பஞ்ச (ஐந்து)அங்கம் (உறுப்பு) என்னும் இரு சொற்களின்
இணைப்பாகும். எனவே பஞ்சாங்கம் என்றால் ஐந்து உறுப்புகளைக் கொண்டது
என்பது பொருள்
. வாரம்
அல்லது கிழமை,
திதி, நட்சத்திரம், யோகம், கரணம் என்னும் ஐந்து
உறுப்புகளைக் கொண்டதுதான் பஞ்சாங்கம்.
வாரம் அல்லது கிழமை என்பது நாளைக் குறிக்கும். இது அடுத்தடுத்து வருவதால் பஞ்சாங்கத்தில் முதலிடம் பெறுகிறது. கிழமை என்றால் உரிமை என்பது பொருள். ஞாயிறு (sun). திங்கள் ( moon), செவ்வாய்( mars ), புதன்( mercury ) வியாழன் (jupiter ), வெள்ளி ( venus), சனி(saturn) என்னும் ஏழு கிரகங்களுக்கு உரியன என்னும் அடிப்படையில் வாரத்தின் ஏழு நாட்களாக
இவை உள்ளன.
பஞ்சாங்க முறையில் நாள் என்பது ஒருநாளின் சூரிய
உதய நேரத்தில்
(காலை
மணி
6) தொடங்கி
மறுநாள் சூரிய உதயம் வரை(காலை 6 மணி வரை) நீடிக்கும் காலமே
ஆகும். இரவு 12 மணி முதல் மறுநாள் இரவு 12 மணி வரை ஒரே நாளாகக்
கணக்கிடப்படும் ஆங்கில முறை பஞ்சாங்க முறையில் இல்லை. எனவே பஞ்சாங்கத்தில் ஒவ்வொரு நாளுக்கும் உரிய சூரிய
உதய நேரம் குறிக்கப் பட்டிருக்கும். இதனைப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நம் முன்னோர்கள்
எவ்விதக் கருவிகளுமின்றி எப்படிக் கணித்தனர் என்பது வியப்புக்குரிய ஒன்றல்லவா?
ஒரு நாள் என்பது 60 நாழிகைகளைக் கொண்டது. அதாவது இரண்டரை நாழிகை 1 மணி நேரமாகும். ( 1 நாழிகை - 24நிமிடம்) மூன்றே முக்கால் நாழிகைகளைக்
கொண்டது ஒரு முகூர்த்தம். (ஒன்றரை மணி நேரம்) ஒரு நாளில் 16 முகூர்த்தங்கள் உள்ளன.
திதி என்பது வான வீதியில் சூரியன் நிற்கும்
இடத்திலிருந்து சந்திரன் நிற்கும் இடத்தின் தொலைவைக் குறிக்கும். அத்தொலைவில் ஒவ்வொரு 12 டிகிரிக்கும் ஒரு
திதி வீதம் கணக்கிடப்படும். 360 டிகிரி 12x30 திதி. வளர்பிறையாகிய சுக்கில
பட்சத்தில் பிரதமை முதல் பௌர்ணமி வரையுள்ள பதினைந்தும் தேய்பிறையாகிய கிருஷ்ணபட்சத்தில்
பிரதமை முதல் அமாவாசை வரையுள்ள பதினைந்தும், ஆக முப்பதாகும். (2 15-30) பிரதமை முதல் துதியை (2- ஆம் ) திரிதியை (3-ஆம் ) சதுர்த்தி,(4-ஆம்) பஞ்சமி (5-ஆம்) சஷ்டி, (6-ஆம்) சப்தமி (7-ஆம்) அஷ்டமி, (8-ஆம்) நவமி(9-ஆம்) தசமி(10-ஆம்) ஏகாதசி(11-ஆம்),துவாதசி{12-ஆம்),
திரயோதசி(13-ஆம்)’, சதுர்த்தசி(14- ஆம்) அமாவாசை அல்லது பௌர்ணமி எனத் திதிகள் பெயர்
பெறும்.
பண்டைக்
காலத்தில் அன்றாட நிகழ்ச்சிக்குப் பிற்காலத்தில் தேதி பயன்பட்டது போலத் திதியே பயன்பட்டு
வந்தது. தேதி என்னும் சொல் திதி என்பதன் திரிபே ஆகும். பஞ்சாங்கத்தில் திதிக்கு
நேராக உள்ள நாழிகை குறிப்பிட்ட திதியின் முடிவுக் காலமாகும்.
பஞ்சாங்கத்தில் திதிக்கு அடுத்தபடி இடம்பெறுவது
நட்சத்திரம்.
இது
சந்திரன் நிற்கும் நட்சத்திர மண்டலத்தைக் குறிக்கும். சந்திர ஸ்புடத்தை வைத்துப்
பதின்மூன்று டிகிரி இருபது நிமிடத்துக்கு ஒன்றாக 360 - 27 - 13.20 அசுவனி முதல் ரேவதி
ஈறாகவும்
27 நட்சத்திரங்களும்
கணக்கிடப் பெறும். பஞ்சாங்கத்தில் குறிப்பிடப் பெறும் நாழிகை நட்சத்திரத்தின் முடிவுக்
காலமாகும். நட்சத்திரத்தை நாளாகக் கணக்கிடுவது தமிழ் மரபாகும்.
நட்சத்திரத்திற்கு அடுத்தது யோகம். யோகம் என்றால் சேர்க்கை
என்று பொருள். சூரிய ஸ்புடத்தையும் சந்திர ஸ்புடத்தையும் கூட்டி 13 டிகிரி 20 நிமிடத்துக்கு ஒன்றாக விஷ்கம்பம் முதல் வைதிருதி
ஈறாகவுள்ள
27 யோகங்களும்
கணக்கிடப் பெறும். பஞ்சாங்கத்தில் குறிக்கப்படுவது குறிப்பிட்ட யோகத்தின் முடிவுக்
காலமாகும்.
சித்தயோகம், அமிர்தயோகம், மரணயோகம் ஆகியவற்றில்
மரணயோகம் தீங்கானது. மற்ற இரண்டும் நல்லவை.
ஐந்தாவது உறுப்பு கரணம். இது திதியை அனுசரித்தது. திதியின் முதல் பாதிக்கு ஒரு கரணமும், இரண்டாம் பாதிக்கு
அடுத்த கரணமும் ஆக முப்பது திதிகளுக்கு அறுபது கரணமாகும். பஞ்சாங்கத்தில் குறிக்கப்
பெறுவது அன்று முதலில் முடிவு பெறும் கரணமும் அதன் நாழிகையும் ஆகும்.
பஞ்சாங்கத்தில் சௌரமானம், சௌர சாந்திரமானம், சாந்திர மானம் என்னும்
மூன்று வித நோக்கில் ஆண்டு, மாதம், தேதிகளைக் குறிக்கின்றனர். சூரிய இயக்கத்தைக்
கொண்டு கணக்கிடுவது சௌரமானம். சந்திரனின் இயக்கத்தைக் கொண்டு மாதங்களைக் கணக்கிட்டுச்
சூரியனைக் கொண்டு திருத்திக் கொள்வது சௌர சாந்திரமானம், சந்திரனின் இயக்கத்தைக் கொண்டு
கணக்கிடுவது சாந்திரமானம்.
தமிழ் மாதங்களின் பிறப்பும் அதனை ஒட்டி அமையும்
ஆண்டுப் பிறப்பும் சூரியனின் இயக்கத்தைக் கொண்டே அமைகின்றன. அதாவது சூரியன் ஓர்
இராசியிலிருந்து மற்றோர் இராசிக்குச் செல்லும் நாளையே ஒரு மாதத்தின் தொடக்கமாகக் கொள்கிறோம். இம்முறையில சூரியன் மேஷ ராசியில் புகும் நாளே புத்தாண்டின்
தொடக்க நாளாகும்.
விண்ணில் சூரியன் செல்வதாகத் தோன்றும் வீதியாகிய
இராசி மண்டலத்தை ஒவ்வொன்றும் 30 டிகிரி அளவுள்ள 12 சமபாகங்களாகப் பிரித்துள்ளனர். இவற்றுக்கு முறையே மேஷம், ( Aries- செம்மறியாடு), இடபம் ( Tarus- எருது) மிதுனம் ( Gemini- இரட்டைமீன்), கடகம் (cancer- நண்டு) சிம்மம் (leo-சிங்கம்) கன்னி (virgo-
இளம்
பெண்),
துலாம் (libra- தராசுக்கோல் ), விருச்சிகம் ( scorpion- தேள்) தனுசு (sagitarius-
வில்) மகரம் (capricon- வெள்ளாடு), கும்பம் ( aquarius- குடம்) மீனம் (pisces- மீன்) என்று வடிவின் அடிப்படையில் பெயரிட்டுள்ளனர். அந்தந்த இராசிகளில் அமையும் நட்சத்திரத் தொகுதிகளின்
வடிவங்களே இப்பெயர்களுக்குக் காரணம். சூரியன் மேஷ ராசியில்
நுழைந்தது முதல் 12 இராசிகளைக் கடந்து மறுபடி மேஷத்தில் நுழையும் வரையுள்ள காலம் ஓர்
ஆண்டாகும்.
இது 365 நாள் 6 மணி 9 நிமிடம் ஒன்பதரை விநாடிகளைக்
கொண்டது.
சூரியன் மேஷம் முதல் ஒவ்வோர் இராசியிலும் நிற்கும்
காலம் மேஷம் முதலிய சௌர மாதமாகும். தமிழ்நாட்டில் மேஷம் முதல் மீனம் ஈறாகவுள்ள சௌர மாதங்களுக்குச்
சித்திரை முதல் பங்குனி ஈறாகவுள்ள பெயர்கள் வழங்கப் பெறுகின்றன. இவை சைத்திரம் முதல்
பால்குணம் ஈறாக உள்ள சாந்திரமான மாதப் பெயர்களின் திரிபுகள். அமாவாசையை அடுத்த முதல் நாள் (பிரதமை) தொடங்கி அடுத்த அமாவாசை
வரையுள்ள காலத்தை - சந்திரன் ஒருமுறை வளர்ந்து தேய்வதை- அடிப்படையாகக் கொண்டதே சாந்திரமாதம். முற்காலத்தில் தமிழர்களும்
சந்திரனைக் கொண்டுதான் மாதங்களைக் கணக்கிட்டனர். எனவேதான் மாதத்திற்குத் தமிழில் திங்கள் (சந்திரன்) என்று பெயர்.
தென் இந்தியாவில் வாக்கிய பஞ்சாங்கம், சித்தாந்த பஞ்சாங்கம், திருக்கணித பஞ்சாங்கம்
என்னும் மூவகைப் பஞ்சாங்கங்கள் புழக்கத்தில் உள்ளன. கிரகணங்கள், நாயன்மார்களின் குருபூசை நாட்கள், ஆழ்வார்களின் திருநட்சத்திரங்கள், விழாக்கள், விரதங்கள், ஆண்டுப் பலன்கள் முதலானவற்றை
அறியவும் பஞ்சாங்கம் பயன்படுகிறது.
சிங்கப்பூர் இந்து
- Singapore Hindu Thinnappan, SP, Panchangam oru paarvai (An explanation to Tamil almanac)Singapore (2000) Vol 12:2 PP 7 (Tamil)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக